
சென்னையில் இன்று காலையில் திருமண விழா ஒன்றில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “பிரதமர் மோடி, 2014-ம் ஆண்டுக்கு முன்பு வெளிநாட்டில் இருக்கும் கருப்புப் பணத்தை மீட்டால் ஆளுக்கு 15 லட்சம் கொடுக்க முடியும் என்றார். 15 ஆயிரமாவது கொடுத்தாரா?’’ என கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன் ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை தன் ட்விட்டர் பக்கத்தில், “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தோல்விபயம் மூண்டுவிட்டது போல் தெரிகிறது. ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆனபின்பும் 90 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஊழல் ஆட்சியை நடத்திவரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் 2014-ம் ஆண்டு தேர்தலில் பாஜக கொடுக்காத வாக்குறுதியைக் கொடுத்தது போல் பேசி வருகிறார்.
அவ்வளவு பணம் வெளிநாட்டில் ஊழல்வாதிகள் பதுக்கி வைத்துள்ளனர் எனச் சொன்னாரே தவிர, அதை ஒவ்வொரு இந்தியரின் வங்கிக் கணக்கில் செலுத்துவோம் என பிரதமர் மோடி சொல்லவே இல்லை. திமுகவினர் போன்ற ஊழல்வாதிகள் என பிரதமர் சொல்லவே இல்லையே? உங்களுக்கு ஏன் இவ்வளவு பதற்றம்?
தங்கள் மருமகன் முறைகேடான பணப் பரிவர்த்தனை செய்யும் வெளிநாட்டு வங்கிகளுடன் தொடர்பில் இருக்கிறாரே? உங்களுக்கு என்ன கவலை? முதல்வரின் மகன் சம்பந்தப்பட்ட நோபல் ஸ்டீல் ஊழல் பற்றி எப்போது விளக்கம் அளிக்கும் இந்த திமுக அரசு?
கடந்த 9 ஆண்டுகளில் 1.25 லட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணம் மீட்கப்பட்டுள்ளது என்பதும், நாட்டில் உள்ள 11 கோடி விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுவதும் ஊழல் திமுக அரசின் முதல்வருக்குத் தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது ”எனப் பதிவிட்டுள்ளார்.