
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையுடன் நிகழ்ச்சி ஒன்றில் ஒரே மேடையில் பங்கேற்ற தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் மகள் கவிதா எழுப்பிய சரமாரி கேள்விகள் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
தனியார் செய்தி நிறுவனம் ஒன்றின் நிகழ்ச்சியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸின் கார்த்தி சிதம்பரம் எம்.பி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா எம்.எல்.சி ஆகியோர் ஒரே மேடையில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கருத்துகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன.
தெலங்கானா எம்.எல்.சி கவிதா, தமக்கே உரித்தான ஆவேச குரலில் பேசாமல் அமைதியான முறையில் அண்ணாமலையின் முகத்துக்கு நேராக சரமாரியாக அடுக்கிய கேள்விகள்தான் இப்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
சமூக வலைதளங்களில் பகிரப்படும் வீடியோவில் அண்ணாமலையை நோக்கி கவிதா எழுப்பியிருக்கும் கேள்விகளில் சில: "மதுரை எய்ம்ஸ் நடைமுறைக்கு வரவில்லை உண்மையா? இல்லையா? தெலுங்கானாவுக்கு எந்த ஒரு சிறப்பு திட்டமும் வரவில்லை உண்மையா? இல்லையா? கார்ப்பரேட் நிறுவனங்களின் ரூ12 லட்சம் கடனை தள்ளுபடி செய்தீர்கள்? ஆனால் 10 ஆண்டுகளில் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யவில்லையே ஏன்?
இன்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக ஒருவர் இருக்கிறார்.. அவர் கிரிக்கெட் வீரரும் கிடையாது... ஒரு கட்சியின் தலைவர் மகன்தான் (அமித்ஷா மகன் ஜெய்ஷா) அந்த பதவியில் இருக்கிறார்.. ஆனால் நீங்கதான் வாரிசு அரசியல் பற்றி பேசுகிறீர்கள்? சிந்தியா குடும்ப அரசியல் வாரிசு ஜோதிராதித்யா சிந்தியாவை வைத்துதான் மத்திய பிரதேசத்தில் ஆட்சியை கவிழ்த்தீர்கள்... அது வாரிசு அரசியல் இல்லையா? முன்பு திமுக, சிவசேனாவுடன் பாஜக கூட்டணி வைத்திருந்தது... அப்போது வாரிசு அரசியல் தெரியவில்லையா?
இவ்வளவு ஏன் இப்ப இருக்கிற உங்க ஆந்திரப் பிரதேச மாநில பாஜக தலைவர் புரந்தரேஸ்வரி.. என்.டி.ராமாராவ் மகள்தானே... அது உங்களுக்கு நினைவுக்கு வரவில்லையா? உங்களுக்கு வசதிப்பட்டால் வாரிசு அரசியலை விமர்சிப்பீங்க? உங்களுக்கு வசதிப்பட்டால் வாரிசு அரசியலை ஏற்றுக் கொள்வீர்களா?
தென்னிந்தியாவில் பாஜகவுக்கு ஒரு சீட்டு கூட கிடைக்காது.. ஜீரோ சீட்தான் கிடைக்கும். நாங்க அதுக்குதான் வேலை செய்யுறோம். தென்னிந்தியாவுக்கு தேவை திட்டங்கள்தான்” இவ்வாறு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா எம்.எல்.சி. அந்த வீடியோவில் கேள்வி எழுப்பி உள்ளார்.