முதல் அக்னிப் பரீட்சை... சத்தீஸ்கர், மிசோரமில் வேட்புமனு தாக்கல்; இந்தியா, என்டிஏ கூட்டணிக்கு சவால்

முதல் அக்னிப் பரீட்சை... சத்தீஸ்கர், மிசோரமில் வேட்புமனு தாக்கல்; இந்தியா, என்டிஏ கூட்டணிக்கு சவால்

நவம்பர் 7ம்தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மிசோரம் மற்றும் சத்தீஸ்கரில் இன்று வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது.

இந்தியா கூட்டணி
இந்தியா கூட்டணி

புதிதாகத் தொடங்கப்பட்ட எதிர்க்கட்சிகளின் `இந்தியா' கூட்டணிக்கும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் (என்.டி.ஏ) முதல் அக்னிப் பரீட்சையாக தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநிலங்களில், இந்த ஆண்டின் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது.

ஐந்து மாநில தேர்தல், 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக நடைபெறவிருக்கிறது என்பதால் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ஐந்து மாநிலங்களிலும் நவம்பரில் வாக்குப்பதிவு நடத்தி, டிசம்பரில் தேர்தல் முடிவுகளை வெளியிடும் வகையில், அதிகாரபூர்வ தேர்தல் அட்டவணையை வெளியிட்டிருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம்.

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத்தில் உள்ள 90 தொகுதிகளில் 20 தொகுதிகளுக்கு நவம்பர் 7ம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. மீதமுள்ள 70 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக நவம்பர் மாதம் 17ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதேபோல தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட உள்ளன.

வடகிழக்கு மாநிலமான மிசோரத்தை பொறுத்த அளவில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 7ம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த நிலையில் இரு மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இன்று முதல் அக். 20ம் தேதி வரை வேட்பு மனுத் தாக்கல் செய்யப்படுகிறது. வேட்புமனுக்கள் வரும் 21 ம்தேதி பரிசீலிக்கப்படுகின்றன. அதனை திரும்பப் பெற அக்டோபர் 23 கடைசி நாளாகும்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in