காங்கிரஸ் வேட்பாளர்களிடம் பேரம் பேசுகிறார் சந்திரசேகர் ராவ் - டி.கே.சிவக்குமார் பகீர் குற்றச்சாட்டு!

டி.கே.சிவக்குமார்
டி.கே.சிவக்குமார்

காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை பி.ஆர்.எஸ் கட்சிக்கு இழுக்கும் நோக்கத்தோடு தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் பேரம் பேசி வருவதாக கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியாவின் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. முன்னணி கட்சிகள் ஆட்சியைக் கைப்பற்ற முட்டி மோதும் நிலையில், நாளை (டிச.3) தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளதால், ஆட்சியை கைப்பற்றப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உச்சத்தில் உள்ளது. மிசோரம் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் டிசம்பர் 4-ம் தேதி வெளியாக உள்ளது.

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்
தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ்

நவம்பர் 30-ம் தேதி தெலங்கானாவில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், அன்று மாலை தேர்தல் கருத்துக் கணிப்புகள் வெளியானது. அதில் தெலங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்க அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டத்தில் இருந்து 2 முறை தொடர்ந்து ஆட்சியில் உள்ள முதலமைச்சர் கே.சி.ஆர். தலைமையிலான பி.ஆர்.எஸ் கட்சி இம்முறை ஆட்சியை இழக்க வாய்ப்புள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அம்மாநில வேட்பாளர்கள் மத்தியில் கட்சித்தாவல்கள் நடைபெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெலங்கானா மாநிலத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் செய்திாளர்களிடம் பேசியதாவது, “தெலங்கானாவில் எந்த பிரச்சினையும் இல்லை, அச்சுறுத்தலும் இல்லை. எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. எங்கள் கட்சி அமோக வெற்றி பெறும். எங்கள் வேட்பாளர்களை தெலங்கானா முதலமைச்சர் நேரடியாக அணுகியுள்ளார். அவர்களை பி.ஆர்.எஸ் கட்சிக்கு இழுக்கும் நோக்கத்தோடு பேரம் பேசி வருகிறார். தேர்தல் முடிவுக்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்'

சிவக்குமார்
சிவக்குமார்

இவ்வாறு கர்நாடகா துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார். மேலும் தெலங்கானா தேர்தல் முடிவுகள் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ரேணுகா சௌத்ரி பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “தெலங்கானாவில் கடந்த முறை பி.ஆர்.எஸ் கட்சி ஆட்சியைப் பிடித்த போது, எங்கள் கட்சியில் இருந்த 12 எம்.எல்.ஏ-க்கள் அக்கட்சிக்கு மாறினார்கள். இம்முறை அவர்கள் கட்சியில் இருந்து யாரும் எங்கள் கட்சிக்கு மாறாமல் இருப்பதற்கான முயற்சியில் பி.ஆர்.எஸ். கட்சியினர் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனாலும் எங்களுக்கு தொலைபேசி வாயிலாக அவர்களிடமிருந்து அழைப்பு வந்துக்கொண்டு தான் இருக்கிறது” இவ்வாறு காங்கிரஸ் தலைவர் ரேணுகா சௌத்ரி தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in