திகார் சிறையில் சொகுசு வாழ்க்கை: ஆம் ஆத்மி அமைச்சரின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு!

திகார் சிறையில் சொகுசு வாழ்க்கை: ஆம் ஆத்மி அமைச்சரின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு!

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்திர ஜெயின் சொகுசு வாழ்க்கை வாழும் சிசிடிவி காட்சி வெளியாகி டெல்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசில் சுகாதார அமைச்சராக இருப்பவர் சத்யேந்திர ஜெயின். இவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சிபிஐ கடந்த 2017-ல் வழக்கு பதிவு செய்தது. இது தொடர்பான சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அவரை அமலாக்கத்துறை கடந்த மே 30-ம் தேதி கைது செய்து திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனிடையே, சத்யேந்திர ஜெயின் மற்றும் அவருடன் கைது செய்யப்பட்ட வைபவ் ஜெயின், அங்குஷ் ஜெயின் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுக்களை டெல்லி சிறப்பு நீதிமன்றம் நேற்று நிராகரித்தது.

இந்நிலையில், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு இரண்டு மூன்று பேர் மசாஜ் செய்யும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஒருவர் காலில் மசாஜ் செய்வதும் இன்னொருவர் கையை பிடித்து மசாஜ் செய்வதுமாக இந்த வீடியோ இருக்கிறது. மேலும் அவருக்கு வெளியில் இருந்து உணவும் தண்ணீரும் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வசதியான படுக்கைகள், நாற்காலிகள் உள்ளிட்டவற்றுடன் ஏகபோக வாழ்க்கையை திகார் சிலையில் அமைச்சர் அனுபவித்து வருவது தற்போது சிசிடி காட்சி மூலம் வெளியாகிறது.

அமைச்சரின் இந்த வீடியோ தற்போது வெளியாகி ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனிடையே, அமைச்சருக்கு உதவி செய்ததாக திகார் சிறை அதிகாரிகள் 15 பேர் ஏற்கெனவே பணியிட மாற்றம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in