விசா முறைகேடு வழக்கு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.
சீன நாட்டினர் 250-க்கும் மேற்பட்டோருக்கு பணம் வாங்கிக்கொண்டு விசா வழங்கி முறைகேடு செய்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் மகனும், சிவகங்கை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக கடந்த மே மாதம் 17-ம் தேதி கார்த்தி சிதம்பரத்துக்கு தொடர்புடைய 9 இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அதன் ஒரு பகுதியாக சென்னை நுங்கம்பாக்கம் பைக்கிராப்ட் சாலையில் உள்ள சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்குச் சொந்தமான வீட்டிலும் சி.பி.ஐ சோதனை நடைபெற்றது. ஆனால் அப்போது வீட்டில் இருந்த ஒரு பீரோவுக்கு சாவி இல்லாததால், அதை திறக்க முடியாமல் அந்த பீரோவுக்கு சி.பி.ஐ அதிகாரிகள் சீல் வைத்துச் சென்றனர். இந்நிலையில் தற்போது லண்டனில் உள்ள கார்த்தி சிதம்பரத்திடம் இருந்து பீரோவின் சாவி பெறப்பட்டதன் அடிப்படையில் இன்று மீண்டும் அவரது வீட்டிற்கு சோதனைக்காக சி.பி.ஐ அதிகாரிகள் 7 பேர் வந்துள்ளனர். இச்சோதனையில் திறந்துள்ள பீரோவில் கிடைக்கப்பெறும் ஆவணங்களின் அடிப்படையில் சி.பி.ஐ அதிகாரிகள் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.