கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது பாய்ந்தது வழக்கு: காரணம் இதுதான்!

கே.எஸ்.அழகிரி, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மீது பாய்ந்தது வழக்கு: காரணம் இதுதான்!

முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 300 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நேஷ்னல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியிடம் நேற்று அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. 2-வது நாளாக இன்றும் ராகுலிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா முழுவதும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதே போல் சென்னையில் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தமிழக காங்கிரஸ் சார்பில் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது.

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வபெருந்தகை, விஜயதாரணி, பிரின்ஸ், சென்னை மாவட்ட செயலாளர் ராஜசேகர் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியினர் அமலாக்கத்துறைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு சாஸ்திரிபவனை முற்றுகையிட வந்தனர். அப்போது அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் காங்கிரஸ் கட்சியினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனே காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட கே.எஸ்.அழகிரி உட்பட 300 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்து பின்னர் விடுவித்தனர்.

இந்நிலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ் அழகிரி, சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட 300 பேர் மீது அனுமதியின்றி ஒன்று கூடுதல், அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபடுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கிடையே இன்று இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை ராகுல் காந்தியிடம் விசாரணை நடத்திவரும் நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து இரண்டாவது நாளாக நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் சத்தியமூர்த்தி பவனிலும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in