கடலூர் மத்திய சிறைச்சாலை கொடுமைகள் குறித்து விரைவில் வழக்கு: யூடியூப்பர் சவுக்கு சங்கர் பேட்டி

கடலூர் மத்திய சிறைச்சாலை கொடுமைகள் குறித்து விரைவில் வழக்கு: யூடியூப்பர் சவுக்கு சங்கர் பேட்டி

கடலூர் மத்திய சிறையில் எத்தனை கைதிகள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்? எத்தனை சிறைக்கைதிகளைக் கண்காணிப்பாளர் செந்தில் குமார் கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளார் என்பது பற்றி புகார் அளித்துள்ளதுடன் ஓரிரு நாட்களில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரு உள்ளதாக யூடியூப்பர் சவுக்கு சங்கர் தெரிவித்துள்ளார்.

மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் பதிவு செய்யப்பட்ட நான்கு வழக்குகளில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட யூடியூப்பர் சவுக்கு சங்கர், அவ்வழக்குகளில் ஜாமீன் பெற்றுள்ளார். இந்த நிலையில், சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணை அதிகாரி முன்பு இன்று இரண்டாவது நாளாக சவுக்கு சங்கர் ஆஜராகி கையெழுத்திட்டார்.

இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " நான் சிறையில் இருந்து வெளியே வந்ததும் எனக்குத் தெரிந்த, என்னுடன் பேசி வரும் பல்வேறு காவல்துறையினரின் செல்போன் அழைப்புகளை ஒட்டுக்கேட்கும் வேலையை மாநில உளவுத்துறையும், சென்னை காவல் துறையும் மேற்கொண்டு வருவதை அறிந்தேன். வாட்ஸ் அப் அழைப்புகளை டிராக் செய்யும் தொழில்நுட்பம் இதுவரை உலகத்தில் எந்த நாடுகளிலும் இல்லாத நிலையில், வாட்ஸ் அப்பில் உள்ள Call Log-ஐ எடுக்கும் தொழிற்நுட்பத்தை மாநில உளவுத்துறையும், சென்னை காவல்துறையும் கண்டுபிடித்து அதன் மூலம் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

குறிப்பாக என்னுடன் பேசி வரும் கீழ்மட்டத்தில் உள்ள காவலர்கள் முதல் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் வரை மாநில உளவுத்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதத்தால் நேரில் அழைத்து மிரட்டப்படுவதே அதற்கு சாட்சி. சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவாலும் இந்த சட்டவிரோத வேலைகளை செய்து வருகிறார்.

ஏற்கெனவே கடந்த 2006-2011-ம் ஆண்டு காலக்கட்டத்தில் சங்கர் ஜிவால் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெற்கு மண்டல இயக்குநராக இருந்தபோது அவரது மனைவி மம்தா ஷர்மா மற்றும் நாராயணயாதவ் ஆகியோர் இயக்குநர்களாக இருந்த D 3D டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தின் உதவியுடன் செல்போன்களை ஒட்டுக்கேட்கும் வேலையை செய்துவந்தனர். தொடர்ந்து உளவுத்துறையில் அவர் பணியாற்றிய போது அந்நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்தி வந்ததால் அவ்விவகாரம் சர்ச்சையானது. இதனால் மம்தா ஷர்மா பதவி விலகினார்.

அதுமட்டுமன்றி குற்ற நடவடிக்கைகளை புலனாய்வு செய்ய ரா, ஐ.பி, இண்டர்போல் போன்ற புலனனாய்வு அமைப்புகள் மட்டுமே பயன்படுத்தி வந்த சேவையான வாட்ஸ்-ஆப் Call Log-ஐ எடுக்கும் முறையை மாநில உளவுத்துறையும், சென்னை காவல் துறையும் தற்போது திமுக அரசுக்கு விரோதமாக பேசுபவர்களை வேவுபார்க்க பயன்படுத்தி வருகிறது. இதுகுறித்து உரிய ஆதாரங்களைத் திரட்டி விரைவில் நீதிமன்றத்தை அணுகுவேன்.

கடலூர் மத்திய சிறையில் எத்தனை கைதிகள் தனிமைச் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்? எத்தனை கைதிகள் கண்காணிப்பாளர் செந்தில் குமாரின் கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர் போன்ற விவரங்களைச் சேகரித்து அதை உள்துறை செயலாளர் மற்றும் சிறைத்துறை டிஜிபி ஆகியோருக்கு மின்னஞ்சல் மற்றுல் பதிவுத்தபால் மூலமும் புகார் அளித்துள்ளேன். அதன் அடிப்படையில் ஒரிரு நாட்களில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்" என்று கூறினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in