
மதுரை விமான நிலையத்தில் அமமுக நிர்வாகி தாக்கப்பட்ட விவகாரத்தில், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை விமான நிலையத்தின் ஓடுதள பாதையில், பேருந்தில் பயணித்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, உடன் பயணித்த ஒரு நபர் தரக்குறைவாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. அமமுக நிர்வாகியான அந்த நபர் ஃபேஸ்புக் நேரலை ஒளிபரப்பில், எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சித்தார்.
இந்த நபர் சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியைச் சேர்ந்த ராஜேஸ்வரன் என்றும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வெளிநாடு வாழ் நலப்பிரிவு மாவட்ட செயலாளராக இருக்கிறார் என்பதும் பின்னர் தெரிய வந்தது. இவர் இவ்வாறு நடந்துகொண்டதை அடுத்து, மதுரை விமான நிலைய வளாகத்தில் வைத்து சிலரால் கடுமையாக தாக்கப்பட்டார்.
அதிமுக தரப்பை சேர்ந்தவர்கள் இந்த தாக்குதலை நிகழ்த்தியதாக புகார் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட ஐந்து பேர் மீது மதுரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோன்று சிங்கம்புணரி ராஜேஸ்வரன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.