தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மூலம் நடக்கும் அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கோரி வழக்கு!

தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மூலம் நடக்கும் அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கோரி வழக்கு!

அதிமுக உட்கட்சி தேர்தல் முறையாக நடத்தப்படாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் மூலமாக நடத்தப்படும் பொதுக்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஒன்றிய அதிமுக மாணவர் அணி முன்னாள் பொருளாளரான சி.பாலகிருஷ்ணன் தாக்கல் செய்த மனுவில், " கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் உட்கட்சி தேர்தலில் அடிப்படை உறுப்பினர்கள் போட்டியிட போதிய அவகாசம் வழங்கவில்லை. உட்கட்சி தேர்தலுக்கு முன்பு கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் அடையாள அட்டையை புதுப்பிக்கவில்லை. அதுதொடர்பாக கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை" என மனுவில் தெரிவித்துள்ளார்.

எனவே, அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான நியமனத்தை ரத்துச் செய்யக்கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், கட்சியின் பொதுக்குழு கூட்டம் ஜூன் 23-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் "இந்த கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எட்ப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு ஆதரவான உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு மட்டும் பங்கேற்க அழைப்பு விடுக்கபட்டுள்ளது. எனவே, இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்கக் கோரியும், அதிமுக உட்கட்சி தேர்தல் அலுவலர்களான பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் தேர்தல் விதிமுறைகளை பின்பற்றி மீண்டும் தேர்தல் நடத்தக்கோரியும், நடந்து முடிந்த உட்கட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும்" என்று மனுவில் தெரிவித்துள்ளார்.

பாலகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ள இந்த மனுவின் எண்ணிடும் பணி நடைமுறைகள் முடிந்த பிறகு, அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in