அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது:அமலாக்கத்துறை வாதம்

அமைச்சர்  செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது:அமலாக்கத்துறை  வாதம்

போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணமோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கூடாது என அமலாக்கத்துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக மின்சாரத் துறை அமைச்சராக இருப்பவர் செந்தில் பாலாஜி, இவர் கடந்த 2011-15-ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது, அத்துறையில் வேலை வாங்கி வருவதாகக்கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர்.

இதன் அடிப்படையில் செந்தில்பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், தேவசகாயம், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மூன்று வழக்குகளைப் பதிவு செய்தனர். அவை சென்னை எம்.பி.-எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி வி.சிவஞானம் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை காரணமாகவே தன் மீது இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால் வழக்கை ரத்து செய்ய வேண்டுமென வாதிடப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத் துறை தரப்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, வேலைக்காக கொடுத்த இரண்டரை லட்சம் ரூபாயைக் கொடுத்து ஏமாந்தவர்கள், தற்போது அந்த வழக்கையே திரும்பப்பெற லட்சக்கணக்கான ரூபாயை செலவழித்து இந்த வழக்கை நடத்துவது ஆச்சரியமளிப்பதாக தெரிவித்தார்.

மேலும், தற்போதைய தமிழக அரசில் அதிகாரமிக்க நபராக உள்ள செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டை அடிப்படையாக கொண்டு தான் வழக்குப்பதிவு செய்துள்ளதால், வழக்கை ரத்து செய்யக்கூடாது என வாதிட்டார். இரு தரப்பு வாதங்கள் நிறைவடையாததால், வழக்கின் விசாரணையை அக்டோபர் 28-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in