திருமாவளவன், சீமான், ஆ.ராசா ஆகியோரின் நாக்கை அறுத்து ஜெயிலுக்கு போவேன் என்று கூறிய பாஜக மாவட்ட தலைவர் மீது போலீஸார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாஜக மூத்த தலைவரும், மேகாலயா மாநில ஆளுநருமான இல.கணேசன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் பூரண நலம் பெற வேண்டி மதுரை வேலம்மாள் மருத்துவமனை அருகே உள்ள ஆதி சிவன் கோயிலில் மாவட்ட பாஜக சார்பாக அக்.7-ம் தேதி ஹோமம் நடத்தப்பட்டது. இதற்கு மதுரை பாஜக புறநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தலைமை தாங்கினார்.
அப்போது செய்தியாளர்களிடம் மகா. சுசீந்திரன். கூறுகையில், "திருமாவளவன், சீமான், திருமுருகன் காந்தி, ஆ. ராசா ஆகியோர் நித்யானந்தா போல தனிநாட்டை உருவாக்கி பல கருத்துக்களை கூறலாம்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர், கப்பலோட்டிய தமிழன் உட்பட பல தலைவர்கள் பிறந்த புண்ணிய பூமி இது. எந்த மதத்தையும் சரி, நாங்கள் பிறந்த மதத்தையும் சரி அவதூறாக பேசியவர்களைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்கமாட்டோம். அரசியல் லாபத்திற்காக இந்து மதம் குறித்து அவதூறு செய்தால் அவர்களின் நாக்கை வெட்டவும், சிறைக்கு செல்லவும், வழக்குக்கும் அஞ்சமாட்டோம்" என்று பேசினார்.
பாஜக மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரனின் இந்த பேச்சுக்கு பலத்த கண்டனம் எழுந்தது. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், மகா.சுசீந்திரன் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.