நாளை கமலாலயத்தில் இருந்தால் நேரம் கொடுக்க இயலுமா? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு அறைகூவல் விடுத்துள்ளார்.
அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு இளையராஜா பேசியது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இதனிடையே, அம்பேத்கர் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுடன் விவாதிக்க தயார் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்நிலையில், அண்ணாமலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு அறைகூவல் விடுத்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், "புரட்சியாளர் அம்பேத்கர் குறித்து விவாதிப்பதற்கு முன் இந்து மதத்தின் புதிர்கள் (Riddles in Hinduism) நூலை தங்களிடம் கொடுத்து அதில் 10 பக்கம் மட்டும் படித்து காட்ட விரும்புகிறோம். நாளை கமலாலயத்தில் இருந்தால் நேரம் கொடுக்க இயலுமா? அண்ணாமலை" என்று வினா எழுப்பியுள்ளார்.