தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவை பகுஜன் சமாஜ் கட்சி ஆதரிக்கும் என அக்கட்சியின் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
இந்த முடிவு தொடர்பாக பேசிய மாயாவதி, "நாங்கள் இந்த முடிவை பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாகவோ அல்லது எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவோ எடுக்கவில்லை. ஆனால் எங்கள் கட்சி மற்றும் இயக்கத்தை மனதில் வைத்து இம்முடிவை எடுத்துள்ளோம். திரௌபதி முர்மு பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த பெண் என்பதால் அவரை நாங்கள் ஆதரிக்கிறோம்"என்று கூறினார்.
மேலும், "ஜனாதிபதி தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக ஜூன் 15 நடத்தப்பட்ட கூட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டுமே மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார். அதுபோல ஜூன் 21 அன்று சரத் பவார் தலைமையில் நடந்த கூட்டத்திற்கு அழைத்தபோது, பிஎஸ்பிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது அவர்களின் சாதிரீதியான நோக்கத்தை காட்டுகிறது" எனவும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சிக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் 0.78 சதவீத வாக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.