தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல்செய்த நிதிநிலை அறிக்கையில், இலக்கியம், தமிழ் வளர்ச்சி சார்ந்து சொன்ன முக்கியமான அறிவிப்புகள் வருமாறு:-
சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில் புத்தக வாசிப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது. புத்தக வாசிப்பை மக்கள் இயக்கமாக எடுத்துச்செல்ல, சென்னை புத்தகக் காட்சி போன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் காட்சிகள் நடத்தப்படும். இத்துடன் இலக்கியச் செழுமைமிக்க தமிழ்மொழியின் இலக்கிய மரபுகளைக் கொண்டாடும் வகையில், ஆண்டுக்கு நான்கு இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும். புத்தகக் காட்சி மற்றும் இலக்கியத் திருவிழாக்களுக்கென வரும் ஆண்டில் ரூ.5 கோடியே 60 லட்ச ரூபாய் செலவிடப்படும்.
மாநிலத்தில் இயங்கிவரும் பொது நூலகங்களின் செயல்பாட்டை ஆய்வுசெய்து மேம்படுத்தத் தேவையான ஆலோசனைகளை வழங்க ஓர் உயர்மட்டக் குழுவை அரசு அமைத்துள்ளது. புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட ஆறு மாவட்டங்களில் அடுத்த 2 ஆண்டுகளுக்குள் உயர்தர வசதிகளுடன் கூடிய மாவட்ட மத்திய நூலகங்கள் ரூ.36 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும். இந்த நூலகக் கட்டிடங்களுக்கு தமிழ் அறிஞர்களின் பெயர்கள் சூட்டப்படும்.
இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.