
திருச்சி அருகே 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சந்திரசேகர் ஸ்வாமி ஆலயம் உள்ள புராணப் பெருமை வாய்ந்த திருச்செந்துறை கிராமம் முழுவதும் வகுப்பு வாரியத்திற்கு சொந்தமானது என பத்திரப்பதிவு துறையும், வக்ஃபு வாரியமும் தெரிவித்திருப்பதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்துறை கிராமவாசிகள் இதுகுறித்து கூறுகையில், ``இந்தக்கோயில் 1,500 ஆண்டுகள் பழமையானது என பல்வேறு ஆவணங்கள் மற்றும் சான்றுகள் கூறுகின்றன. திருச்செந்துறை கிராமத்தின் உள்ளேயும், வெளியேயும் 369 ஏக்கர் நிலம் கோயிலுக்குச் சொந்தமானது என்று பழைய ஆவணங்கள் கூறுகின்றன. 9-ம் நூற்றாண்டில் சோழ மன்னன் முதலாம் பராந்தக சோழன் மருமகளும், அறிகுலகேசரியின் மனைவியுமான இருக்கவேலி ஆதித்த பிடாரி என்ற ராணியால் கட்டப்பட்ட ஈசானமங்களம் என அழைக்கப்படும் திருச்செந்துறையில் சந்திரசேகர் சுவாமி கோயில் இன்றும் உள்ளது.
கோயில் சுவரில் உள்ள கல்வெட்டு தெளிவாக இதை விளக்குகிறது. விளக்கு எரிக்க கோயிலை சுற்றிய நிலம் தானமாக வழங்கப்பட்டதையும். அமுது படைக்க பொன் தானமாக வழங்கப்பட்டதையும் அந்த கல்வெட்டு தெளிவாக விளக்குகிறது. இவ்வாறு தெளிவாக இருக்கும்போது இந்த கிராமம் முழுமையும் வக்ஃபு வாரியத்தில் உள்ளது என்று எப்படி சொல்ல முடியும்? இதை எப்படி மாற்று மதத்தினர் உரிமை கோர முடியும்?" என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா திருச்செந்துறை கிராமத்திற்கு இன்று வந்தார். அங்கே உள்ள சந்திரசேகர சுவாமி கோயிலில் நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் பங்கேற்றார்.
பின்னர் இதுகுறித்து அவர் பேசினார். "இந்த விவகாரத்தை தமிழகம் முழுவதும் கொண்டு செல்வோம். இது திருச்செந்துறையில் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இப்படியான சூழல் நிலவுவது வேதனையான ஒன்று. திருச்செந்துறை கிராமத்தில் உள்ள அனைத்து சர்வே நம்பரும் வக்ஃபு போர்டுக்கு சொந்தமாம். வக்ஃப் போர்டு பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு கோப்பு அனுப்புமாம், உடனே பதிவாளர் அதை மக்களுக்கு அறிவிப்பாராம். இந்துக்கோயில் நிலம் எப்படி வக்ஃபு நிலமானது? இதற்கெல்லாம் போராட்டமே முடிவு கட்டும். மோசடியை முறியடிப்போம்.
இந்தக்கோயிலின் சொத்துக்கள் அனைத்தும் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமானது என அறிவிப்பு வெளியிடவேண்டும். சம்மந்தப்பட்ட துறை அமைச்சர் சேகர்பாபு இதனை 15 தினங்களுக்குள் அனைத்து கோயில்களின் அறிவிப்பு பலகைகளிலும் அந்தந்த கோயில் நிலம் குறித்து வெளியிடவேண்டும். அப்படி செய்யாத பட்சத்தில் இந்துக்களை ஒன்று திரட்டி நாடு முழுவதும் பெரும் போராட்டத்தை முன்னெடுப்போம்.
தமிழகத்தில் நடப்பது திமுக ஆட்சியா அல்லது மாலிக்காபூர் ஆட்சியா? இந்துக்கள் உள்ள இந்த திருநாட்டில், திருக்கோயில் நிலம் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தம் என வெளியிடும் சூழலில் தமிழகம் இருப்பது வேதனை. ஆண்டாண்டு காலமாக கிராமங்களில் இந்து கோயிலை சுற்றி வாழும் இந்துக்கள் வெளியேற்றும் முயற்சி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள வக்ஃபு வாரிய செயல் அலுவலர் ரபியுல்லாவை உடனடியாக பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் நாங்கள் ஓயப்போவதில்லை. பாஜக சார்பில் பெருதிரள் ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்படும்" என்றார் ராஜா.
தமிழகத்தில் நடப்பது திமுக ஆட்சியா அல்லது மாலிக்காபூர் ஆட்சியா? இந்துக்கள் உள்ள இந்த திருநாட்டில். திருக்கோயில் நிலம் வக்ஃபு வாரியத்திற்கு சொந்தம் என வெளியிடும் சூழலில் தமிழகம் இருப்பது வேதனை. ஆண்டாண்டு காலமாக கிராமங்களில் இந்து கோயிலை சுற்றி வாழும் இந்துக்கள் வெளியேற்றும் முயற்சி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள வக்ஃபு வாரிய செயல் அலுவலர் ரபியுல்லாவை உடனடியாக பதவி நீக்கம் செய்து கைது செய்ய வேண்டும். இல்லையென்றால் நாங்கள் ஓயப்போவதில்லை. பாஜக சார்பில் பெருதிரள் ஆர்ப்பாட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்படும்" என்றார் ராஜா.