சென்னையில் உணவக உரிமையாளரை நடுரோட்டில் ஓட ஓட விரட்டித் தாக்கிய பாஜக நிர்வாகி உள்ளிட்டவர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன் ஓஎம்ஆர் சாலையில் ஃபாஸ்ட் ஃபுட் கடை நடத்தி வருகிறார். நேற்று தனது கடைக்கு செல்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார். பட்டினப்பாக்கம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த போது, முன்னால் சென்ற காரை முந்துவதற்காக ஹாரன் ஒலி எழுப்பியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முன்னால் சென்ற காரில் இருந்த 4 பேர் காரை நிறுத்தி விட்டு, கீழே இறங்கி வந்து, மணிவண்ணனை காரில் இருந்து இறக்கி அவரை கடுமையாகத் தாக்கினர்.
இதனால் அடிதாங்க முடியாமல் மணிவண்ணன் அங்கிருந்து ஓடினார். ஆனாலும் அந்த கும்பல் அவரை விரட்டி விரட்டித் தாக்கியது. இதனைப் பார்த்த பொதுமக்கள் பதறினர். அப்பகுதியில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. போக்குவரத்து காவலர் வந்து சமாதானப்படுத்தியும் அவர்கள் விடவில்லை. அந்த கும்பலில் ஒருவர், தான் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி என்று கூறி போக்குவரத்துக் காவலரையும் மிரட்டியுள்ளார்.
இது குறித்து உணவக உரிமையாளர் மணிவண்ணன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார், கார் பதிவு எண்ணை வைத்து, தாக்குதல் நடத்திய அந்த கும்பலை கண்டறிந்தனர். திருவொற்றியூரைச் சேர்ந்த பாஜக நிர்வாகி கார்த்திக் ராஜா, கோபி, சுடலையாண்டி ஆகியோர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் கார்த்திக் ராஜா, பாஜகவில் மாவட்ட பொருளாதார பிரிவு செயலாளராகவும், கோபிநாத், ஆயுதப்படை காவலராகவும் பணிபுரிந்து வருவதாகவும் தெரிய வந்துள்ளது.