அதிமுகவுக்குப் போட்டியாக போராட்டம் அறிவித்த பாஜக!

அண்ணாமலை
அண்ணாமலைஅதிமுகவுக்குப் போட்டியாக போராட்டம் அறிவித்த பாஜக!

சட்ட ஒழுங்கு மற்றும் கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக வரும் 22்-ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் பேரணியாக சென்று ஆளுநரிடம் மனு கொடுக்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே வரும் 20-ம் தேதி பாஜக சார்பில் கண்டன போராட்டம் நடத்தப்படும் என அண்ணாமலை அறிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழகத்தின் பிரதான எதிர்கட்சி யார் என்பது குறித்த வார்த்தைப் போர் அதிமுக - பாஜக இடையே நடந்து ஓய்ந்தது. இந்த நிலையில், அதனை மீண்டும் கையில் எடுத்துள்ளது பாஜக.

கள்ளச்சாராயம் மற்றும் சட்ட ஒழுங்குப் பிரச்சினைக் குறித்து அதிமுகவினர் தனது தலைமையில் பேரணியாக சென்று மனு கொடுக்கவுள்ளதாக ஈபிஎஸ் இன்று காலை அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்த விவகாரத்தில் அதிமுகவிற்கு முன்னதாக போராட்டத்தை நடத்தி பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதனை உறுதி செய்யும் வகையில் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’தமிழகத்தில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடும் கள்ளச் சாராய விற்பனையையும் அவற்றால் ஏற்பட்ட துயர் மரணங்களையும் தடுக்கத் தவறிய திறனற்ற திமுக அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தமிழக பாஜக சார்பில் வரும் 20-ம் தேதி மாபெரும் கண்டன போராட்டத்தை நடத்தவிருக்கிறோம்.

இந்த போராட்டத்தை நமது மகளிர் அணியினர் முன் நின்று நடத்துவார்கள். சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் நான் பங்கேற்பேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலையின் இந்த அறிவிப்பின் மூலம் யார் எதிர்கட்சி என்பது குறித்தான போட்டி மீண்டும் அதிமுக - பாஜக இடையே துவங்கியுள்ளது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in