பாஜகவின் துணை ஜனாதிபதி வேட்பாளராக மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தங்கார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
வரும் ஆகஸ்ட் 10-ம் தேதியுடன் தற்போதயை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிகாலம் முடிவடைகிறது. இதனையடுத்து இப்பதவிக்கான தேர்தல் ஆகஸ்டு 6-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக ஜக்தீப் தங்காரை நேற்று பாஜக அறிவித்தது.
யார் இந்த ஜக்தீப் தங்கார்?
ராஜஸ்தான் மாநிலம் கிதானாவில் 1951-ம் ஆண்டு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் ஜக்தீப் தங்கார். ராஜஸ்தான் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வழக்கறிஞரான இவர் 1989 -91 காலகட்டத்தில் ஜனதா தளம் கட்சியின் சார்பில் ராஜஸ்தானின் ஜுஞ்ஜுனு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அதனைத் தொடர்ந்து 1990-91 காலகட்டத்தில் அப்போதைய பிரதமர் சந்திரசேகரின் அமைச்சரவையில் பாராளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
1993 - 1998 ம் ஆண்டு வரை ராஜஸ்தான் மாநிலத்தின் கிஸன்கர்ட் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் தங்கார் பணியாற்றியுள்ளார். அதன் பின்னர் 2008-ம் ஆண்டில் இவர் பாஜகவில் இணைந்தார். ராஜஸ்தான் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவராகவும் பதவி வகித்த ஜக்தீப் தங்கார் 2019-ம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். மேற்கு வங்க ஆளுநராக நியமிக்கப்பட்ட பின்னர் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இவருக்கும் இடையே அடிக்கடி மோதல் போக்கு நிலவி வந்தது. 71 வயதான இவர் தற்போது பாஜகவின் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாஜகவின் வேட்பாளராக இவரை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, “ ஒரு விவசாயின் மகனான ஜக்தீப் தங்காரை பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்க முடிவு செய்துள்ளோம்’ என தெரிவித்தார்.