ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழியை வைத்து பிற மொழிகளை பாஜக அழிக்கப் பார்க்கிறது என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், " ஆண்டுதோறும் ஜன. 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மொழிப்போர் தியாகிகள் பாடங்களாக இருந்து வழிநடத்திக் கொண்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் தமிழ்நாட்டு இளைஞர்கள் வலம் வர இருமொழி கொள்கையே காரணமாக உள்ளது.
மத்திய பாஜக இந்தி மொழியை திணிப்பதைத் தனது வழக்கமாக கொண்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மொழியை வைத்து பிற மொழிகளை பாஜக அழிக்கப் பார்க்கிறது.
திமுக தோன்றியது முதலே மொழிக்காப்பு இயக்கமாக இருந்து வருகிறது. இதனால், இந்தி மொழிக்கு எதிரான போராட்டம் தொடரும்" என்றார்.