‘குற்றவாளிகளை ஆதரிக்கிறது பாஜக’ - பிரதமர் மோடியை கடுமையாக சாடிய ராகுல் காந்தி

‘குற்றவாளிகளை ஆதரிக்கிறது பாஜக’ - பிரதமர் மோடியை கடுமையாக சாடிய ராகுல் காந்தி

குஜராத்தில் பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் விடுதலை செய்யப்பட்டு, அவர்களை கொண்டாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. குற்றவாளிகளை ஆதரிப்பது என்பது பெண்கள் குறித்த பாஜகவின் கீழ்த்தரமான எண்ணங்களையே குறிக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்வீட்டில், “ உன்னாவில் பாஜக எம்.எல்.ஏவை காப்பாற்றுவது. கதுவாவில் பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்வது. ஹத்ராஸில் பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு ஆதரவாக அரசு நிற்கிறது. குஜராத்தில் பாலியல் வன்கொடுமை செய்தவர்களை விடுதலை செய்து கொண்டாடுவது.

இவ்வாறு குற்றவாளிகளை ஆதரிப்பது, பெண்களைக் குறித்த பாஜகவின் கீழ்த்தரமான எண்ணங்களையே குறிக்கிறது. இது போன்று அரசியல் செய்ய வெட்கமாக இல்லையா பிரதமரே?” என கேள்வியெழுப்பியுள்ளார்

2002-ல் நடந்த குஜராத் கலவரத்தின்போது, பில்கிஸ் பானோ எனும் கர்ப்பிணியைப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அவரது குழந்தை உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரை ஒரு கும்பல் கொன்றது. இவ்வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேர் சில நாட்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டனர். குஜராத் அரசு அமைத்த குழு தண்டனைக் குறைப்பு வழங்க முடிவெடுத்ததன் அடிப்படையில், 15 ஆண்டுகளுக்குப் பின்னர் அவர்கள் விடுதலையாகினர். கோத்ரா சிறையிலிருந்து வெளியில் வந்த அவர்களை சிலர் வரவேற்று இனிப்பு பரிமாறும் காணொலி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்களில் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறார் ஓர் இளைஞர். இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகின.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in