சனாதனத்தை ஒழிப்போம் என்று பேசிய அமைச்சர் உதயநிதியின் நாக்கை பிடுங்குவோம் என்ற மத்திய அமைச்சரின் பேச்சுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் தமிழ்நாடு எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு, மலேரியா, கொரோனா உள்ளிட்டவை போல் சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டியது என உதயநிதி தெரிவித்திருந்தார். இவரது இந்த பேச்சுக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
சனாதனத்தை ஒழிப்போம் என கூறிய உதயநிதியின் தலையை சீவுவோம் என அயோத்தி சாமியார் மிரட்டல் விடுத்திருந்தார். பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பலர் சனாதனம் குறித்து உதயநிதி பேசியதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.சிலர் உதயநிதிக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளனர்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், "சனாதனத்தை எதிர்த்தால் நாக்கை பிடுங்குவோம், கண்களை தோண்டுவோம். சனாதனத்திற்கு எதிராக பேசும் எவரும் நாட்டில் அரசியல், அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாது. சனாதனத்தை ஒழிப்பதாக கூறுவதை பொறுத்து கொள்ள முடியாது" என சர்ச்சையை ஏற்படுத்தும்படி பேசியுள்ளார்.
இந்நிலையில் இவருடைய கருத்துக்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அண்ணாமலை பேசுகையில், நாக்கை துண்டிப்பதாக வன்முறையை தூண்டும் வகையில் மத்திய அமைச்சர் பேசியிருந்தால் அது தவறு" என்று அண்ணாமலை தெரிவித்தார். ஏற்கெனவே உதயநிதியின் தலைக்கு ரூ 10 கோடி விதித்த சாமியாருக்கு கண்டனம் தெரிவித்தும் அண்ணாமலை பேசியிருந்தார்.