விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை... பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

தைலாபுரத்தில் பாஜக-பாமக கூட்டணி பேச்சுவார்த்தை
தைலாபுரத்தில் பாஜக-பாமக கூட்டணி பேச்சுவார்த்தை

மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜக, பாமக இடையே இன்று காலை முதல் தீவிர பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த நிலையில், பாமகவிற்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறுகிறது. திமுக கூட்டணி கட்சி தொகுதி பங்கீடுகள் நிறைவடைந்து ஒவ்வொரு தொகுதிக்குமான வேட்பாளர்கள் பட்டியல் கூட்டணி கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், தேசிய ஜனநாயக கூட்டணிக்குள், பாமகவை கொண்டு வர தமிழக பாஜக கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. அதேநேரம், அதிமுகவும், பாமகவை தங்கள் கூட்டணிக்குள் கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

தைலாபுரம் தோட்டத்திற்கு வந்த பாஜக நிர்வாகிகளுக்கு வரவேற்பு
தைலாபுரம் தோட்டத்திற்கு வந்த பாஜக நிர்வாகிகளுக்கு வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாமக எம்எல்ஏ அருள், நேற்று முன்தினம் சென்னையில் சந்தித்தார். இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக உயர்நிலை குழு மற்றும் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்தில், கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ், தற்போதைய அரசியல் சூழல்கள் குறித்து விளக்கமாக பேசினார்.

பாமகவுக்கு 10 தொகுதிகளை ஒதுக்க பாஜக முடிவு
பாமகவுக்கு 10 தொகுதிகளை ஒதுக்க பாஜக முடிவு

அனைத்து அரசியல் சூழல்களை கருத்தில் கொண்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதே சாலச்சிறந்தது என்று அவர் கட்சியினரிடம் தெரிவித்தார். அன்புமணி ராமதாஸ் கருத்தை முழு மனதாக ஏற்ற நிர்வாகிகள் உற்சாகத்துடன் ஆதரித்தனர். கூட்டணி தொடர்பாகவும், தொகுதி எண்ணிக்கை தொடர்பாகவும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார். இதற்காக இன்று காலை பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் தைலாபுரம் தோட்டத்திற்கு வருகை புரிந்தனர். தற்போது தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ராமதாஸ், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இரு கட்சி தலைவர்களுக்கும் இடையே 10 தொகுதிகளை பாமகவிற்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in