மதுரை துணைமேயரைக் கண்டித்து கொட்டும் மழையில் பாஜக ஆர்ப்பாட்டம்

பாஜக நடத்திய ஆர்ப்பாட்டம்
பாஜக நடத்திய ஆர்ப்பாட்டம்மதுரை துணைமேயரைக் கண்டித்து கொட்டும் மழையில் பாஜக ஆர்ப்பாட்டம்

மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜனைக் கண்டித்து கொட்டும் மழையில் பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை 80- வது வார்டு ஜெய்ஹிந்துபுரம் எம்ஜிஆர் கிழக்குத் தெருவில் மாநகராட்சி துணைமேயர் டி.நாகராஜன் 20 அடி அகலப்பாதையை 7 அடி பாதையாக குறைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக புதுவிளாங்குடியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் பி.சிவாஜி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். இதுதொடர்பாக அரசு அதிகாரிகளிடமும், மாநகராட்சி அதிகாரிகளிடமும் அவர் புகார் மனுக்களை வழங்கியுள்ளார்.

ஆனால், பட்டாவுடன் கூடிய அந்த இடத்தை ( 2176 சதுரடி கொண்ட 5 சென்ட் ) துணைமேயர் டி.நாகராஜனின் மனைவி என்.செல்வராணி உள்பட 4 பேர் கடந்த 2018-ம் ஆண்டு வாங்கியுள்ளனர் என்றும், இந்த 4 வீடுகளின் உரிமையாளர்கள் சொந்த பயன்பாட்டிற்கு 7 அடி பாதையை விட்டு வீடுகள் கட்டியுள்ளனர் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மா.கணேசன் விளக்கமளித்துள்ளார். மேலும், மார்க்சிஸ்ட கட்சி மீதும், துணைமேயர் மீதும் அவதூறு பரப்பும் பாஜக பிரமுகர் சிவாஜி மீது அவதூறு வழக்குத் தொடருவோம் என்றும் எச்சரித்து அறிக்கை விட்டிருந்தார்.

இந்த நிலையில், மதுரை மாநகராட்சி துணைமேயர் நாகராஜனைக் கண்டித்து ஜெய்ஹிந்த்புரத்தில் கொட்டும் மழையில் பாஜக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். துணைமேயர் நாகராஜனைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in