பாஜக ஆட்சிக்கு வந்தால் காவல்துறையினரின் காக்கி சீருடை காவி நிறமாக மாற்றப்படும் என திருச்சியில் ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் ஆவேசமாக கூறினார்.
சனாதனத்திற்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி, அதனை கண்டு கொள்ளாத அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் பதவி விலக கோரி திருச்சியில் பாஜகவினர் முற்றுகை போராட்டம் நடத்தினர். திருச்சி திருவானைக்காவலில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் முன்பு, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையில் ஆர்பாட்டம் நடைபெற்றது. அப்போது ஒலிபெருக்கி வைக்க போலீஸார் அனுமதி வழங்காததை கண்டித்து ஹெச். ராஜா போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனை தொடர்ந்து இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற பாஜகவினரை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச். ராஜா, ‘’திராவிடம் என்பது சித்தாந்தம். சனாதனம் என்பது மனிதர்கள். 80 கோடி மனிதர்களை கொலை செய்வேன் என்று பேசுவது சரியா? அமைச்சர் உதயநிதியை கைது செய்யும் வரை, சேகர் பாபு அமைச்சர் பதவியில் இருந்து விலகும் வரை எங்களது போராட்டம் தொடரும்.
உதயநிதி ஸ்டாலின் பேசுவதற்கு என்ன தகுதி இருக்கு. ஆணவ கொலைகள் திருமாவளவன், சுப வீரபாண்டியன் வந்த பிறகு தான் வந்தது. ஆர்.ராசாவுடன் விவாதம் செய்வதற்கு நான் தயாராக இல்லை” என்றார்.
இந்நிலையில் போராட்டத்தில் பங்கேற்க வந்திருந்த ஹெச். ராஜா துவக்கம் முதலே கடும் கோபத்துடன் காணப்பட்டார். குறிப்பாக, ஒலிபெருக்கிக்கு கூட அனுமதி வழங்காதது ஏன்? என்று கேட்டு காவல்துறை அதிகாரிகளை கடுமையாக சாடிய அவர் ஒரு கட்டத்தில், 'பாஜக ஆட்சிக்கு வந்தால் காவல்துறையின் காக்கிச் சீருடை, காவி நிறமாக மாற்றப்படும்' என்றும் கூறி அதிர செய்தார்.