மாநிலங்களவையில் பெரும்பான்மையை இழந்தது பாஜக: மசோதாக்களை நிறைவேற்றுவதில் சிக்கல்!

மாநிலங்களவையில் பெரும்பான்மையை இழந்தது பாஜக: மசோதாக்களை நிறைவேற்றுவதில் சிக்கல்!

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் விலகிவிட்டதால் மாநிலங்களவையில் பாஜக அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. இதனால் மசோதாக்களை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பிஹாரில் நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்- பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்றது வந்தது. இந்நிலையில், பாஜகவை கூட்டணியில் இருந்து வெளியேற்றினார் நிதீஷ்குமார். இதையடுத்து, லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து மீண்டும் பிஹார் முதல்வராக நிதீஷ்குமார் பதவியேற்றுக் கொண்டார். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி துணை முதல்வரானார். இதனிடையே, கூட்டணியில் இருந்து பாஜகவை ஐக்கிய ஜனதா தளம் கட்சி வெளியேற்றிய நிலையில், மாநிலங்களவையில் பாஜகவின் பெரும்பான்மை குறைந்துவிட்டது.

மாநிலங்களவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 237. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 100 உறுப்பினர்கள் இருந்தனர். அத்துடன் சுயேச்சை 1 மற்றும் நியமன உறுப்பினர்கள் 4 சேர்த்து பாஜக அணியின் பலம் 115 ஆக இருந்தது. தற்போது, மாநிலங்களவையில் 5 உறுப்பினர்கள் கொண்ட நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதால் பாஜக அணிக்கான எண்ணிக்கை 110 ஆக குறைந்துவிட்டது.

அடுத்து நடைபெற இருக்கும் குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்பாக திரிபுராவில் ஒரு உறுப்பினரும், ஜம்மு காஷ்மீரில் இருந்து 3 நியமன உறுப்பினர்களும் மாநிலங்களவையில் புதிதாக சேர உள்ளனர். அவர்களையும் சேர்த்தால் தேசிய ஜனநாயக கூட்டணி உறுப்பினர்களின் எண்ணிக்கை 114 ஆக உயரும். எனினும், மாநிலங்களவையின் பெரும்பான்மைக்கு 121 உறுப்பினர்கள் தேவை. எனவே, கூடுதலாகத் தேவைப்படும் 7 எம்பி-க்களின் ஆதரவை திரட்ட 9 உறுப்பினர்கள் கொண்ட ஒடிசாவின் பிஜு ஜனதா தளம், ஆந்திராவின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவையும் பெற வேண்டிய நிலை பாஜக கூட்டணிக்கு ஏற்பட்டுள்ளது. மாயாவதியின் பிஎஸ்பி, பஞ்சாபின் சிரோன்மணி அகாலி தளம் மற்றும் தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் ஆகிய கட்சிகள் குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் முர்முவுக்கு ஆதரவளித்தது குறிப்பிடத் தக்கது.

அதே நேரத்தில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த ஹரிவன்ஷ், தற்போது மாநிலங்களவை துணைத் தலைவராக இருக்கிறார். கூட்டணியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சி விலகிய நிலையில், அப்பதவியில் ஹரிவன்ஷ் தொடர்வாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால் மசோதாக்களை நிறைவேற்றுவதில் பாஜக அரசுக்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சிரோன்மணி அகாலி தளம், சிவசேனா, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் விலகிய நிலையில் தற்போது, ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் விலகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in