மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக தலைவர் தலையில் துப்பாக்கிக் குண்டுக்காயத்துடன் இறந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பகீரத் பியானி(47). இவர் பாஜக நகரத்தலைவராக இருந்து வந்தார். அவர் நேற்று குளியலறையில் தலையில் குண்டு காயத்துடன் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நந்தகுமார் தாக்கூர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பகீரத் பியானி உடலைக் கைப்பற்றி விசாரணைக்கு உத்தரவிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், "நாங்கள் துப்பாக்கியைக் கைப்பற்றியுள்ளோம். அது பியானி உரிமம் பெற்ற துப்பாக்கி என்பது தெரிய வந்துள்ளது. ஐந்து நாட்களுக்கு முன்பு தனது சமூக ஊடகத்தில் துப்பாக்கியின் படத்தை வெளியிட்டார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்" என்று கூறினார். இதுகுறித்து பெத் பீட் காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், பியனி நேற்று முன்தினம் மும்பைக்கு சென்றவர் நேற்று தான் வீடு திரும்பியுள்ளார். 11 மணியளவில் அவரைக் குடும்பத்தினர் பார்த்துள்ளனர் என்றனர். இதன் பின் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். துப்பாக்கியால் சுட்டு பாஜக தலைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.