`அண்ணாமலையுடன் பேசுவது என்னுடைய குரல் இல்லை'- சர்ச்சை ஆடியோவுக்கு பாஜக மாவட்ட தலைவர் விளக்கம்

`அண்ணாமலையுடன் பேசுவது என்னுடைய குரல் இல்லை'- சர்ச்சை ஆடியோவுக்கு பாஜக மாவட்ட  தலைவர் விளக்கம்

நிதியமைச்சர் கார் மீது காலணி வீசிய தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மதுரை மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் பேசுவது போன்ற ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அதற்கு பாஜக மாவட்ட தலைவர் விளக்கமளித்துள்ளார்.

கடந்த 13-ம் தேதி தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரரான லட்சுமணனின் உடலுக்கு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்திவிட்டு விமான நிலையத்தில் இருந்து காரில் திரும்பினார். அப்போது, அமைச்சர் கார் மீது பாஜகவினர் சிலர் காலணி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்த அவனியாபுரம் காவல்துறையினர் 10 பேரை கைது செய்து, 30-க்கும் மேற்பட்ட பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சூழலில், அமைச்சர் கார் மீது காலணி வீசிய சம்பவம் தொடர்பாக மதுரை மாவட்ட பாஜக தலைவரான மகா சுசீந்திரனிடம் மாநில தலைவர் அண்ணாமலை பேசும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில், "இதை எப்படி அரசியலாக்குவது என்று யோசித்து வருகிறேன்" என்று அண்ணாமலை கூறுவது போன்றும் அதற்கு மறுமுனையில் மகா சுசீந்திரன் பதிலளிப்பது போன்றும் பதிவாகி உள்ளது.

இந்நிலையில், அதில் பேசுவது தன்னுடைய குரல் இல்லை என்றும், எடிட் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார் மகா சுசீந்திரன். மேலும், "தானும் அண்ணாமலையும் ஒரே காரில் தான் பயணித்ததாகவும், காவல்துறையினர் தன்னுடைய தொலைபேசி எண்ணை சோதனை செய்தால் உண்மை நிலை தெரியவரும்" என்று விளக்கமளித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in