விருதுநகர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸை எதிர்த்து பாஜக போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
தேர்தல் முன் பணிகளை கவனிப்பதற்காக பாஜக முக்கிய பிரமுகர் சிலரை மக்களவைத் தொகுதிகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறது பாஜக தலைமை. அப்படித்தான் அமைச்சர் எல்.முருகன் நீலகிரி தொகுதிக்கான அலுவலகம் திறந்து அங்கே தேர்தல் தொடர்பான வேலைகளை கவனித்து வருகிறார். இவர் தான் நீலகிரி தொகுதிக்கான பாஜக வேட்பாளர் என்பது உறுதியாகி இருக்கிறது.
இதேபோல் மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் ராம.ஸ்ரீனிவாசன் விருதுநகரில் அலுவலகம் திறந்து அங்கே தேர்தல் பணிகளை கவனித்து வருகிறார். இவர் தான் விருதுநகர் தொகுதிக்கான பாஜக வேட்பாளர் என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
இதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக விருதுநகர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தாமரை சின்னத்துடன் சுவர் விளம்பரங்களை எழுதி வரும் பாஜகவினர், அங்கெல்லாம் ராம.ஸ்ரீனிவாசனின் படத்தையும் பெயரையும் பெரிதாக போட்டு வருகிறார்கள். இன்னும் வேட்பாளர் பட்டியல் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை என்றாலும் ஸ்ரீனிவாசன் தான் விருதுநகர் வேட்பாளர் என்பதை பாஜக பிரமுகர்கள் உறுதிப்படுத்துகிறார்கள்.
திமுக கூட்டணியில் இந்தத் தொகுதி இம்முறை மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டு அங்கே வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுவார் என முன்பு பேசப்பட்டது. ஆனால், விருதுநகரை விட்டுவிட்டு இப்போது திருச்சிக்கு மாறி இருக்கிறார் துரை வைகோ. இதனால் விருதுநகரில் காங்கிரஸ் தான் இம்முறையும் போட்டியிடும் என தெரிகிறது.
அப்படி உறுதியானால் ராகுலுக்கு நெருக்கமான மாணிக்கம் தாகூர்தான் மறுபடியும் விருதுநகரில் வேட்பாளராக களமிறங்குவார் என்கிறது காங்கிரஸ் வட்டாரம். விருதுநகர் தொகுதியில் காங்கிரஸும் பாஜகவும் நேருக்கு நேராக மோதலாம் என்பதால் தங்களுக்கு எளிதான வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதிமுக தரப்பில் விருதுநகர் எம்பி சீட்டுக்கு இப்போது போட்டி அதிமாகி வருகிறது.