
தமிழக ஆளுநரை ஒருமையில் பேசிய அமைச்சர் உதயநிதியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டுமென தமிழக பாஜகவினர் ஆளுநருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டு பேசிய உதயநிதி, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை கடுமையாக விமர்சித்தார். "நீட் தேர்வை ரத்து செய்ய மாட்டேன்னு ஆளுநர் பேசுறாரு. நீங்க யாரு இதை சொல்றதுக்கு? நீங்களே போஸ்ட்மேன் வேலையை பாக்குறீங்க. ரொம்ப திமிரா பேசுறாரு ஆளுநர். அவர் ஆளுநர் ரவி அல்ல. ஆர்எஸ்எஸ் ரவி. ஆளுநருக்கு நான் சவால் விடுக்கிறேன். தமிழ்நாட்டில் ஏதாவது தொகுதியில நின்னு உங்களால் ஜெயிக்க முடியுமா? மக்கள் செருப்பால அடிப்பாங்க" என உதயநிதி பேசினார்.
இதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுத் தொடர்பாக தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘’ஆளுநருக்கு எவ்வளவு திமிர்.. எவ்வளவு கொழுப்பு.. நான் சவால் விடுகிறேன். ஆளுநருக்கு தைரியம் இருந்தால் தமிழ்நாட்டில் ஏதாவது தொகுதியில் நின்று அவரால் வெற்றி பெற முடியுமா..
உங்கள் கொள்கைகளை எடுத்து சொன்னா தமிழக மக்கள் உங்களை செருப்பால அடிப்பாங்க" இப்படி பேசுனது ஒரு சாதாரண மூன்றாம் தர மேடை பேச்சாளர் அல்ல. தமிழ்நாட்டில் அமைச்சராக இருப்பவர்... முதல்வரின் மகனாக இருக்கக்கூடிய உதயநிதி தான் இப்படி பேசி இருக்கிறார். வெட்கக்கேடான விஷயம் தமிழகத்தில் நடந்திருக்கிறது.
தேர்தலில் தோற்றால் மக்கள் செருப்பால் அடித்ததற்கு சமம் என்றால் உதயநிதி அவர்களே, உங்கள் தந்தை கூட தேர்தலில் நின்று தோற்றவர்தான். உங்கள் அளவுக்கு நான் தரம்தாழ்ந்து பேச மாட்டேன். ஆனால் இதுபோன்ற பேச்சுகள் மக்களை தூண்டிவிடும் பேச்சுகள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் செயலை நீங்கள் செய்து கொண்டிருக்கிறீர்கள். உடனடியாக உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும். உதயநிதியை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்’’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.