`ஆதீனத்தை தொட்டுப்பாருங்கள், மோடி என்ன செய்வார் என காண்பிப்போம்'- அமைச்சர் சேகர்பாபுவை மிரட்டும் அண்ணாமலை

`ஆதீனத்தை தொட்டுப்பாருங்கள், மோடி என்ன செய்வார் என காண்பிப்போம்'- அமைச்சர் சேகர்பாபுவை மிரட்டும் அண்ணாமலை

மதுரையில் நடைபெற்ற பாஜக அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொது கூட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை, ``அமைச்சர், ஆதீனத்தை தொட்டால் மக்களும், பாஜகவும், மோடியும் என்ன செய்வார்கள் என காண்பிப்போம்'' என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

மதுரை பழங்காநத்தத்தில் பாஜக அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொது கூட்டம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன், பாஜக மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய மத்திய இணை அமைச்சர் முரளிதரன், "சமீபத்தில் மாற்றப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தான் அண்ணாமலைக்கு திமுக அரசின் ஊழல்கள் குறித்து தகவல்கள் கொடுத்தவர்கள். அதனால் தான் அவர்களை அரசு உடனடியாக மாற்றியுள்ளது. 70 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நம்பி அண்ணாமலை அரசியல் செய்யவில்லை. மக்களை நம்பி அரசியல் செய்கிறார். அதிகாரிகளை மாற்றினாலும் திமுக அரசின் ஊழல்களை அம்பலப்படுத்தும் அண்ணாமலையின் பணி தொடரும்" என்றார்.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, "திமுகவினர், காவல்துறையின் கைகளை கட்டிப்போட்டு கட்டப்பஞ்சாயத்து செய்கிறார்கள். முதலமைச்சர் காவல் நிலையத்திற்கு ஆய்வு செய்ய சென்ற பின்னரே தமிழகத்தில் குற்றங்கள் அதிகமாகி உள்ளது. பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நூதனமான ஊழலை ஆரம்பித்து உள்ளார். மதுரையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரியை ஒரே நாளில் திண்டுக்கல்லுக்கு மாற்றி மீண்டும் மதுரைக்கே மாற்றியுள்ளார்.

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர வேண்டும் என்கிறார். ஆனால், அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர கூடாது என்கிறார். ஒரே மரத்தின் கீழ் நின்று கள்ளை குடித்துவிட்டு இருவரும் இரு வேறு கருத்துக்களை சொல்கிறார்கள். மக்களை முட்டாள் ஆக்குவதில் பி.டி.ஆர் தான் சிறந்த உதாரணம்.

பெண்களுக்கு ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தில், இல்லத்தரசிகள் யார் என்று கண்டுபிடித்து கொண்டு இருக்கிறோம் என்கிறார் அமைச்சர் பி.டி.ஆர். ஆட்சிக்கு வந்து ஒருவருட காலத்தில் 21 குழுவை உருவாக்கி சாதித்துள்ளது திமுக அரசு. இனி 22-வது குழுவை உருவாக்கி இல்லத்தரசிகளை கண்டுபிடிக்கும் பொறுப்பை அமைச்சர் பி.டி.ஆர் வசம் ஒப்படையுங்கள்" என்றார்.

மேலும், "முதலமைச்சர் துபாய் சென்று வந்த பின்னர் அமைச்சர்கள் எல்லோரும் வெளிநாடுகளுக்கு சென்று கொண்டிருக்கின்றனர். மின்துறை அமைச்சர் தற்போது ஸ்காட்லாந்து கடலில் காற்றாலை அமைப்பதை பார்வையிட சென்றுள்ளார். கடலில் காற்றாலை போட்டால் அணில் ஏறி போய் கடிக்க முடியாது.

திமுக அரசின் ஊழல்களை வெளிக்கொண்டு வந்ததற்காக என் மீது இந்த ஓராண்டில் மட்டும் இதுவரை ரூ. 620 கோடி அளவுக்கு மான நஷ்டஈடு வழக்கு போட்டுள்ளார்கள். செந்தில் பாலாஜி என் மீது தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது முதலமைச்சர் ஸ்டாலினையும் கூண்டுக்குள் ஏற்றுங்கள் என கேட்பேன். அவர் தான் செந்தில் பாலாஜியை ஊழல் அமைச்சர் என குற்றம்சாட்டியவர்" என்று தெரிவித்தார்.

பண மோசடி செய்ததற்காக ராகுல் காந்தி, சோனியா காந்தியை அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைத்து உள்ளது என்ற அண்ணாமலை, வேலை இல்லாத காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி டெல்லியில் போய் சண்டை போட்டுவிட்டு சட்டை கிழிந்துவிட்டது என்கிறார். சண்டையில் சட்டை கிழிய தான் செய்யும்.

திமுக அமைச்சர் சேகர் பாபு மதுரை ஆதீனத்தை பற்றி தவறாக பேச ஆரம்பித்த அன்றே கதை காலி. பழைய சேகர் பாபுவை பார்ப்பீர்கள் என்று மிரட்டுகிறார். கோயில் உண்டியல் மீது தான் திமுகவினருக்கு கண் என ஆதீனம் சொன்னதில் என்ன தவறு? ஆதீனத்தை மட்டும் தொட்டுப் பாருங்கள். மதுரை மக்களும், பாஜகவும், மோடியும் என்ன செய்வார்கள் என காண்பிப்போம். ஆதீனத்துக்கும் பாஜகவிற்கு சம்பந்தம் கிடையாது. ஆதீனம் மக்கள் பக்கம் நிற்பதால் அவரின் பக்கம் பாஜக நிற்கிறது" என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in