
பிஹார் பாஜக ட்விட்டர் கணக்கை முடக்க வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனத்திற்கு சென்னை காவல் துறை கடிதம் எழுதியுள்ளது.
தமிழ்நாட்டில் பிஹார் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவது போலவும், அவர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு இல்லை என்பது போலவும் சில போலி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டன.
தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்களின் நலன் காக்கும் நடவடிக்கையை அரசு எடுத்து வருகிறது. அத்துடன் வெளிமாநில தொழிலாளர்கள் தொடர்பாக வதந்தி பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
இந்த நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் வதந்தி விவகாரத்தில் , பிஹார் பாஜக ட்விட்டர் கணக்கை முடக்க ட்விட்டர் நிறுவனத்திற்கு சென்னை போலீஸார் கடிதம் எழுதியுள்ளனர். மேலும், தவறான தகவல் பரப்பியதாக பிஹார் பாஜகவின் ட்விட்டர் கணக்கு மீது குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.