ராம நவமி ஊர்வலத்திற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்து, ஜார்க்கண்ட் சட்டசபையில் பாஜக நேற்று சலசலப்பை உருவாக்கியது. மேலும், ஜார்க்கண்ட் மாநிலம் தலிபான்களால் ஆளப்படுகிறதா என்றும் பாஜக உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபையின் கேள்வி நேரத்தின் போது, ஹசாரிபாக்கின் ராம நவமி ஊர்வலத்தில் டிஜே இசை கச்சேரி அனுமதிக்கப்பட வேண்டும் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் மணீஷ் ஜெய்ஸ்வால் கோரிக்கை வைத்தார். மேலும், “ ஜார்க்கண்ட் மாநிலத்தில் தலிபான்கள் ஆட்சியா நடக்கிறது. ஊர்வலத்தின் போது டிஜேவை அனுமதிக்கக் கோரி தனது தொகுதியான ஹசாரிபாக்கில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த அப்பாவி மக்கள் 5 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹசாரிபாக்கில் ராம நவமி ஊர்வலத்தின் 104 ஆண்டுகால பாரம்பரியத்தை அழிக்க திட்டமிட்ட முயற்சி நடக்கிறது” என்றும் குற்றம் சாட்டினார். இதனைத் தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்கள் சபையில் ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஹனுமான் போன்ற முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.
ஹசாரிபாக்கில் டிஜே இசைக்கக் கோரி தர்ணா நடத்துபவர்கள் பாஜகவினர் என்று தெரிவித்த அமைச்சர் மிதிலேஷ் தாக்கூர், "டெசிபல் வரம்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இணங்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்து, முஸ்லிம், சீக்கியர், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரையும் நாங்கள் மதிக்கிறோம். நாங்கள்தான் உண்மையான ராம பக்தர்கள்" என்றார்.
ராம நவமி ஊர்வலங்களின் போது டிஜே மற்றும் லத்திகள் உள்ளிட்ட பாரம்பரிய ஆயுதங்களை எடுத்துச் செல்ல மாநில அரசு சமீபத்தில் தடை விதித்தது. கடந்த ஆண்டு பல வட மாநிலங்களில் ராமநவமி கொண்டாட்டங்களின்போது வன்முறை ஏற்பட்டதால், முன்னெச்சரிக்கையாக ஜார்க்கண்ட் மாநில அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது