சென்னையில் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பேரனை தாக்கிய புகாரில் இந்து அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் (ஐஏஎஸ்) மீது கொலைமிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கே.கே நகரைச் சேர்ந்தவர் சுபாஷ்(22). இவர் தனது தாய், தங்கையுடன், அண்ணா நகரில் இருந்து அசோக் பில்லர் நோக்கி நேற்று காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கோயம்பேடு பகுதியில் இருந்து வந்த கார் அதிவேகமாக முந்தி செல்வது போலவும், தொடர்ந்து ஒலி எழுப்பியும் பின் தொடர்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
அசோக் நகர் பகுதி அருகே இது தொடர்பாக காரில் இருந்த பெண்ணுக்கும், சுபாஷீக்கும் வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது அந்த பெண், யாருக்கோ போன் செய்துள்ளர்ர. அப்போது டூவீலர் அங்கு மது போதையில் ஒருவர் வந்துள்ளார். அவர் சுபாஷீடன் தகராறு செய்து தாக்கியுள்ளார். இதுகுறித்து அசோக் காவல் நிலலையத்தில் சுபாஷ் புகார் அளித்தார். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியின் பேரன் என்பதும், அவரை போதையில் தாக்கியது இந்து சமய அறநிலைத்துறை கூடுதல் ஆணையரும், ஐஏஎஸ் அதிகாரியுமான கண்ணன் என்பதும், காரில் வந்த பெண் கண்ணனின் உறவினர் விஜயலட்சுமி என்பதும் தெரிய வந்தது.
இதனையடுத்து இரு தரப்பினரிடையும் அசோக் நகர் காவல் துணை ஆணையர் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர்.. காங்கிரஸ் மாநில தலைவர் அழகிரி பேரனை தாக்கிய சம்பவம் காட்டுத்தீ போல் பரவியதை அடுத்து காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் அசோக் நகர் காவல் நிலையத்தில் குவிந்தனர். மேலும் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி காவல் நிலையத்திற்கு வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்து அறநிலையத்துறை அதிகாரி கண்ணன் மதுபோதையில் இருந்தாரா என்பதை உறுதி செய்ய நள்ளிரவில் அவரை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச் சென்று மீண்டும் காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்த விவகாரத்தில் விஜயலட்சுமியின் காரை ஓட்டி வந்த கண்ணனின் ஓட்டுநர் முத்துராஜா மீது நான்கு பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்து அறநிலையத்துறை அதிகாரி கண்ணன், அவரது உறவினரான விஜயலட்சுமி ஆகியோர் மீது கொலைமிரட்டல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.