
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவது இறுதி செய்யப்பட்டுள்ளதால் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் தலா ஐந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈவேரா திருமகன் திடீர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததை அடுத்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் போட்டியிட 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், 83 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அமமுக வேட்பாளர் சிவபிரசாத் உள்பட 6 பேர் தங்கள் வேட்புமனுவை வாபஸ் பெற்றுக் கொண்ட நிலையில், தற்போது மொத்தம் 77 பேர் களத்தில் உள்ளனர்.
தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். 77 வாக்காளர்களுடன் நோட்டாவும் இடம்பெறும் என்பதால் மொத்தம் 78 பெயர்கள் வைக்கப்பட வேண்டும். ஒரு வாக்குப்பதிவு இயந்திரத்திற்கு 16 வேட்பாளர்கள் என்ற கணக்கீட்டின் அடிப்படையில், 5 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒரு வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. அவை வாக்குச்சாவடிகளுக்கு உரிய நேரத்தில், உரிய முறையில் அனுப்பி வைக்கப்படும் என்றும் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
காங் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ‘கை’ சின்னமும், ஒதுக்கீடு, தென்னரசுவுக்கு ‘இரட்டை இலை’ சின்னமும், தேமுதிக வேட்பாளர் ஆனந்துக்கு ‘முரசு’ சின்னமும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகாவுக்கு கரும்பு விவசாயி சின்னமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டார்ச் லைட், குக்கர் சின்னங்கள் ஆகியவை சுயேட்சைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
சின்னம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுடன், ஏராளமான சுயேட்சை வேட்பாளர்களும் சுறுசுறுப்பாக தங்களுக்கான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.