
டெல்லி புதிய மதுபானக் கொள்கை விவகாரம் தொடர்பாக மத்திய அமலாக்கப் பிரிவினரால் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில் அர்விந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புதிய மதுபானக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் முறைகேடு நடந்திருப்பதாக மத்திய அமலாக்கத்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர்.
அவர்களின் விசாரணையில் டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா முறைகேடு செய்திருப்பது உறுதி செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டு சில மாதங்களாகியும் அவருக்கு உச்ச நீதிமன்றம் வரை சென்றும் ஜாமீன் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் துணை முதல்வரை அடுத்து டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. டெல்லியின் புதிய மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக நவம்பர் இரண்டாம் தேதியான இன்று முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் என்று அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
இதனையேற்று அர்விந்த் கேஜ்ரிவால் இன்று ஆஜர் ஆவார் என்று சொல்லப்படும் நிலையில், விசாரணையின் முடிவில் அவரும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுவதால் டெல்லியில் பரபரப்பு நிலவுகிறது.
இது தொடர்பாக பா.ஜ எம்.பி மனோஜ்திவாரி, "சட்ட விரோத பணப்பரிமாற்றத்தில் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் பலருக்குத் தொடர்பு உள்ளது. இதனால் முக்கிய நிர்வாகிகள், ஏன் கேஜ்ரிவால் கூட கைது செய்யப்படலாம் . அந்த அளவுக்கு ஆதாரங்கள் உள்ளதாக அறிகிறேன்" என்று கூறியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.