ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் தொடர்பாக பிரதமர் மோடியை கடுமையாக தாக்கியுள்ள டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இன்றைய அரசு ஆங்கிலேய அரசை விட ஆபத்தானது” என்று தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தியின் தகுதிநீக்கம் நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள சூழலில், டெல்லி சட்டசபையில் இன்று மாலை பேசிய முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், "நமது முன்னோர்கள் சுதந்திரத்திற்காகவும், ஆங்கிலேயர்களிடம் இருந்தும் இந்தியாவை விடுவிக்கவும் போராடினார்கள். ஆனால், இன்றைய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு ஆங்கிலேயர்களை விட ஆபத்தானது. இது காங்கிரஸின் போராட்டம் மட்டுமல்ல. ஒட்டுமொத்த நாட்டிற்குமான போராட்டம்" என்று கூறினார்.
மேலும், "ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியை ரத்து செய்த விதம் ஒரு கோழைத்தனமான செயல். இது ஒரு பயமுறுத்தும் அரசாங்கத்தின் அடையாளம். நாட்டில் ஒரே கட்சி மற்றும் ஒரே தலைவர் மட்டுமே இருக்கக்கூடிய சூழலை உருவாக்க பாஜக விரும்புகிறது" என்று தெரிவித்துள்ளார்.