மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக நடைபெற்ற ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு இதுவரைக்கும் 4 கோடியே 81 லட்சம் செலவிடப்பட்டிருக்கிறது.
உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மரணத்தில் மர்மம் உள்ளது என பல்வேறு தரப்பினரும் சந்தேகம் எழுப்பினர். இதையடுத்து ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக 2017-ம் ஆண்டில் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. ஜெயலலிதாவிற்குச் சிகிச்சை அளித்த மருத்துவர்கள், முன்னாள் முதலமைச்சர், அரசு அதிகாரிகள் என பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடைபெற்றது. அனைத்துத் தரப்பினரிடமும் விசாரணை முடிவடைந்த நிலையில் 608 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகம் சாமி அண்மையில் சமர்ப்பித்தார்.
இந்நிலையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு ஆகியிருக்கும் செலவு பற்றி தகவல் வெளியாகி இருக்கிறது. நீதிபதி, அலுவலர்களின் ஊதியம், மருத்துவம், வாடகை , பயணச் செலவுகள், தொலைப்பேசி கட்டணம், வாகன பராமரிப்பு , அரசு வழக்கறிஞர்கள் கட்டணம், ஒப்பந்த ஊதியம் என்று நான்கு கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாகத் தெரிய வந்திருக்கிறது. கடந்த 2018-ம் ஆண்டு 30 லட்ச ரூபாயும், 2019-ம் ஆண்டு 83 லட்ச ரூபாயும், 2020-ம் ஆண்டு ஒரு கோடியே 8 லட்ச ரூபாயும், 2021–ம் ஆண்டு ஒரு கோடியே 3 லட்ச ரூபாயும், 2022-ம் ஆண்டு ஒரு கோடியே 4 லட்ச ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது.