திமுகவுக்கு செயற்கையான வெற்றி- சொல்கிறார் ஓபிஎஸ்

ஓபிஎஸ்
ஓபிஎஸ்

"நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக செயற்கையான வெற்றியை பெற்றிருக்கிறது. தேர்தல் நியாயமாக நடைபெற்றிருந்தால் அதிமுக மகத்தான வெற்றியை பெற்றிருக்கும்" என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்த ஒன்றுதான். இதன்மூலம் ஆளும்கட்சி செயற்கையான வெற்றியை பெற்று இருக்கிறது. இந்தத் தேர்தல் நூறு விழுக்காடு சுதந்திரமாகவும், நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற்றிருந்தால் அதிமுக மகத்தான வெற்றியை பெற்றிருக்கும். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை என்பது துரதிருஷ்டவசமானது. நடந்து முடிந்த தேர்தல் என்பது முழுமையான மக்கள் எண்ணத்தின் பிரதிபலிப்பு அல்ல.

"மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் பொன்மொழிக்கேற்ப மக்களின் தீர்ப்பிற்கு அதிமுக தலை வணங்குகிறது. அதிமுகவுக்கும், அதன் தோழமை கட்சிகளுக்கும் வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு இந்தத் தருணத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதிமுக இதற்கு முன்புகூட பல தோல்விகளை சந்தித்தாலும், அவற்றில் இருந்து மீண்டு வந்து மகத்தான வெற்றிகளை படைத்து இருக்கிறது. "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்- தர்மமே மறுபடியும் வெல்லும்" என்பதை மெய்ப்பிக்கும் வகையில் மக்களின் உண்மையான மன நிலையையும், விருப்பத்தையும் வெளிப்படுத்துவதற்கான ஜனநாயக ரீதியான வாய்ப்பு விரைவில் அமையும். அந்த நன்னாள் வரும்போது மக்கள் சக்தி வெல்லும், மக்களின் விருப்பப்படி அதிமுக மீண்டும் வெற்றி பெறும். இது நிச்சயம் நடக்கும். அதிமுக உடன்பிறப்புகள் எவ்விதமான தொய்வுமின்றி எப்போதும் போல் கழகப்பணியை மேற்கொள்ளவும், மக்கள் தொண்டாற்ற வேண்டும் என்றும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in