பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க சென்னை வந்துள்ள பிரதமர் மோடியுடன் நெருக்கம் காட்டுவதை முதலமைச்சர் ஸ்டாலின் தவிர்த்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முனையத்தைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார். ரூ.1,260 கோடி மதிப்பில் 1,36,295 சதுர மீட்டரில் கட்டப்பட்டுள்ளது. இந்த முனையம் மூலம், பயணிகளைக் கையாளும் திறன் ஆண்டுக்கு 2.3 கோடியிலிருந்து 3 கோடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த முனையத்தில் தமிழ் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில், புகைப்படங்கள், ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. இதனைத் திறந்து வைத்த பிரதமர் மோடி, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் உள்ளிட்டோர் பார்வையிட்டு வந்தனர்.
அப்போது பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் மற்றும் அதிகாரிகள் இந்த திட்டம் குறித்து விளக்கிக் கூறி வந்த நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அதனை ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருந்தார். இதனைக் கவனித்த பிரதமர் மோடி ’ஏன் ஒதுங்கி நிற்கிறீர்கள் வாங்க’ என ஸ்டாலினைத் தனது அருகில் வருமாறு அழைத்து கையைக் குலுக்கினார்.
அப்போது அருகில் வந்த முதலமைச்சர் ஸ்டாலின் ’அதெல்லாம் ஒன்றுமில்லை’ எனக் கூறும் விதமாகப் பிரதமரின் கையை இறுக்கமாகப் பிடித்த நிலையில், சட்டென விலகி முன்னே நடந்து சென்றார். இந்த காட்சிகள் தற்போது சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நீட், ஜிஎஸ்டி, ஆளுநர், மாநில சுயாட்சி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் மத்திய அரசு மாநில அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்து வரும் நிலையில், பிரதமருடன் நெருக்கம் காட்டுவது தேவையற்ற சச்சரவுகளுக்கு இடமளிக்கும் என்பதால் முதலமைச்சர் ஸ்டாலின் திட்டமிட்டுத் தவிர்த்துள்ளதாகத் தெரிகிறது.