தொடரும் சர்ச்சைகள்... இடியாப்பச் சிக்கலில் அதிமுக!

அதிமுக மேயர் வேட்பாளரின் தந்தை மீது மேலும் ஒரு பாலியல் புகார்
நாஞ்சில் முருகேசன்
நாஞ்சில் முருகேசன்

அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் மீது இரணியல் காவல் நிலையத்தில் மேலும் ஒரு பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே சிறுமியைக் கடத்தி பாலியல் தொல்லைக் கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு வெளியில் வந்தவர் நாஞ்சில் முருகேசன். இவரது மகள் ஸ்ரீலிஜாவை மேயர் வேட்பாளராக அறிவித்துத்தான் நாகர்கோவில் மாநகராட்சித் தேர்தலை சந்திக்கிறது அதிமுக. நாகர்கோவிலில் ஓ.பன்னீர் செல்வம் இன்று தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ள நிலையில் அதிமுகவின் மேயர் வேட்பாளரின் அப்பா நாஞ்சில் முருகேசன் புதிய சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறார்.

நாகர்கோவில் மாநகராட்சியில் திமுக, அதிமுக, பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இதில் அதிமுகவின் மேயர் வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசனின் மகள் ஸ்ரீலிஜா அறிவிக்கப்பட்டுள்ளார். அவரும் வார்டுக்குள் சுற்றிச், சுழன்று பணி செய்துவருகிறார். நாஞ்சில் முருகேசன் அதிமுக ஆட்சியில் 2011 முதல் 2016 வரை நாகர்கோவில் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இந்தக் காலக்கட்டத்திலேயே அதிமுகவின் மாவட்ட செயலாளராகவும் சிலகாலம் இருந்தார். ஒழுகினசேரி பகுதியில் இவருக்கு சொந்தமான இடத்தில் இயங்கிவந்த டாஸ்மாக் பாரில் இரவும், பகலும் இடைவிடாது சாராய வியாபாரம் நடப்பதாக முந்தைய ஆட்சியிலேயே இவர் மீது சர்ச்சைகள் எழுந்தன. அதேபோல் ரியல் எஸ்டேட் புள்ளியான நாஞ்சில் முருகேசன் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிகளவில் விவசாய நிலங்களை வீட்டுமனைகளாகவும் மாற்றினார். ஆனால் இதில் எல்லாம் அவருக்கு சிக்கல் எழவில்லை.

அதிமுக மேயர் வேட்பாளர் ஸ்ரீலிஜா
அதிமுக மேயர் வேட்பாளர் ஸ்ரீலிஜா

அண்மையில் சிறுமியைக் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக இவர் மேல் புகார் எழுந்தது. இதனால் முந்தைய அதிமுக ஆட்சியிலேயே கடந்த 2017 ஆம் ஆண்டு நாஞ்சில் முருகேசன் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார். இதனால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நாஞ்சில் முருகேசனை அதிமுக தலைமை நீக்கியது. சிறையில் இருந்து வெளியில் வந்தவர் அதிமுகவில் சேர தொடர்ந்து தூதுவிட்டுவந்தார். அதற்கு உள்ளாட்சித் தேர்தல் கைமேல் பலன் தந்தது. நாஞ்சில் முருகேசனின் மகள் ஸ்ரீலிஜாவை மேயர் வேட்பாளராகவும் அறிவித்தது அதிமுக.

இந்நிலையில் வில்லுக்குறியை சேர்ந்த குமார் (47) என்பவர் பலத்த தாக்குதலுக்கு உள்ளாகி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், ``நான் எனது மனைவி விஜய ஸ்ரீ மற்றும் இருமகள்களுடன் வசித்துவருகிறேன். என் மனைவிக்கும் நாஞ்சில் முருகேசனுக்கும் தவறான உறவு இருந்துள்ளது. இதை நான் நேற்று இரவு பார்த்துவிட்டேன். உடனே என்னை நாஞ்சில் முருகேசனும், அவரது ஓட்டுனர் மகேஷும் சேர்ந்து சரமாரியாக அடித்தனர்’’ என குறிப்பிட்டுள்ளார். இதன் பேரில் இரணியல் போலீஸார், முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 294(பி), 323, 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விளக்கம் பெற முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசனை பலமுறை தொடர்பு கொண்டோம். அவரது அலைபேசி எண் அணைத்துவைக்கப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in