தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை... அண்ணாமலையின் அடேயப்பா அறிவிப்பு!

வேலூரில் பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம்.
வேலூரில் பாஜக தலைவர் அண்ணாமலை நடைபயணம்.

தமிழ்நாட்டில் 2026-ல் பாஜக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை நிச்சயம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

 ’என் மண் என் மக்கள்’ யாத்திரை
’என் மண் என் மக்கள்’ யாத்திரை

பிரதமர் நரேந்திர மோடி அரசின் சாதனைகளை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லும் விதமாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ’என் மண் என் மக்கள்’ யாத்திரை பயணத்தை நடத்தி வருகிறார். ராமேஸ்வரத்தில் இந்த பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.

நகரத்தின் உள் பகுதிகளில் நடை பயணமாக 1700 கிலோ மீட்டர் தூரமும், வாகன மார்க்கமாக 900 கிலோ மீட்டர் தூரமும் என மொத்தம் ஐந்து கட்டங்களாக 234 தொகுதிகளுக்கும் செல்லும் வகையில் இந்த நடை பயணத்தை அண்ணாமலை திட்டமிட்டு நடத்தி வருகிறார். பிப்ரவரி இரண்டாவது வாரம் இந்த நடைபயணத்தை நிறைவு செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், வேலூரில் நேற்று நடைபயணத்தில் பங்கேற்ற அண்ணாமலை, “2026-ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கட்சி வெற்றிபெற்று தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தால் கொய்யாபழத்திற்கும் பிரதமர் மோடி புவிசார் குறியீடு அறிவிப்பார்.

தமிழ்நாட்டியில் 9 ஆண்டுகளாக காமராஜர் ஆட்சி செய்தார். அவரது ஆட்சியின் கீழ் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் அணைகள் கட்டப்பட்டது. அதன்பிறகு தமிழ்நாட்டில் ஆட்சி செய்த எந்த முதல்வர்களும் அணைகள் கட்டவில்லை. அணைக்கட்டு தொகுதியில் திமுக, அதிமுக கட்சிகள் மாறி மாறி பங்காளிகள் சண்டை போட்டு கொண்டிருக்கிறார்கள்.

திமுகவினர் மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக அதிமுகவினர் குற்றம் சாட்டி வருகின்றனர். அதேபோல் சட்டத்திற்கு புறம்பாக கல்குவாரிகளில் 200 கோடிக்கு மேல் அதிமுகவினர் சம்பாதித்து விட்டதாக திமுகவினர் கூறுகின்றனர். பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் 500 நாட்களில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் நடந்த குரூப் - 1, குரூப் -2, குரூப்- 4 தேர்வுகள் நடந்து முடிவுகள் வந்த பிறகும் அவர்களுக்கு பணி வழங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

 ’என் மண் என் மக்கள்’ யாத்திரை
’என் மண் என் மக்கள்’ யாத்திரை

வருகின்ற 2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் நிச்சயமாக குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும். கடந்த 9 தலைமுறைகளாக எனது குடும்பத்தில் யாரும் அரசு வேலையில் பணியாற்றவில்லை. எனக்கு மட்டும்தான் அரசு வேலை கிடைத்தது.

இந்த நிலைமை மாறி அரசு வேலை இல்லாத குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை நிச்சயம் வழங்கப்படும். வேலூர் மக்களவைத் தொகுதியில் பாஜக கட்சி சார்பில் ஏ.சி. சண்முகம் வேட்பாளராக அறிவிக்கப்பட இருக்கிறார். அவரை வெற்றிபெற செய்யுங்கள்” என்று பேசினார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in