கவலைக்கிடமாக உள்ள தமிழகத்தை கொஞ்சம் கவனிங்க: முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கோரிக்கை

கவலைக்கிடமாக உள்ள தமிழகத்தை கொஞ்சம் கவனிங்க: முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை கோரிக்கை

தமிழ் மொழியையும், திருக்கோயில்களையும் மக்களாகிய நாங்கள் பாதுகாத்துக் கொள்கிறோம்,  நீங்கள் கவலைக்கிடமாக இருக்கும் தமிழ்நாட்டையும்,  ஆட்சியையும் கவனியுங்கள் என்று முதல்வர்  ஸ்டாலினுக்கு  பாஜக தலைவர் அண்ணாமலை  அறிவுறுத்தியுள்ளார்.

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இந்தியைக் கட்டாயப் பாடமாக  அனுமதிக்கும்படி வெளியான தகவல்களை மேற்கோள் காட்டி  கட்டாய இந்தியை புகுத்தி இன்னொரு மொழிப்போரைத் திணிக்காதீர் என்று முதல்வர் ஸ்டாலின் நேற்றைய தினம் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.  அதற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மிக நீண்டதான அந்த அறிக்கையில் பல்வேறு விஷயங்களை அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

அவரது அறிக்கையில், " முதல்வரின் தமிழ்மொழி மீதான இந்த திடீர் கரிசனத்தை எண்ணி சிரிப்பதா…? அழுவதா..? என்றே தெரியவில்லை. எப்போதெல்லாம் திமுகவின் மீது மக்களுக்கு அதிருப்தி அலை வீசுகிறதோ, எப்போதெல்லாம் ஊடகங்கள் கூட திமுகவிற்கு எதிராக பேசத் தொடங்குகின்றனவோ அப்போதெல்லாம் மொழி பிரச்சினையை  எழுப்புவது திமுகவின் திராவிட மாடல்.

உலகம் தோன்றிய காலத்திலிருந்து, எத்தனையோ ஊழிக் காலங்களை எல்லாம் கடந்து, எத்தனையோ அடக்குமுறைகளை எல்லாம் தாண்டி, தமிழ் உலகின் சிறந்த மொழியாக இன்னும் உயர்ந்து நிற்கிறது.  1957-ம் ஆண்டில் முதன்முதலாக தேர்தலில் போட்டியிட்டு, ஒரு சில இடங்களை வென்ற திமுக கழகம்தான் தமிழை உலகம் தோன்றிய காலத்திலிருந்து காப்பாற்றி வந்து இருப்பது போல ஒரு மாயத் தோற்றத்தை  உருவாக்க நினைப்பது நகைப்பிற்கிடமாக இருக்கிறது.

1957 வரை தமிழ் எப்படி அழியாமல் இருந்ததோ  அது போல  தமிழ்மொழி தன்னைத் தானே காத்துக் கொள்ளும், கவலைப்படவேண்டாம். காலத்தால் அழிக்க முடியாத தமிழ் மொழி, திமுகவை மட்டும் நம்பியிருப்பதாக நினைக்க வேண்டாம். நீங்கள் அதைச் சிதைக்காதிருந்தால் போதும். 1967-ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து ஆட்சிப்பொறுப்பில் மாறி மாறி இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம். தமிழ் மொழிக்காக என்ன செய்திருக்கிறது? ஒரு வார்த்தை கூட படிக்காத தமிழ் எழுத தெரியாத ஒரு சமுதாயத்தை உருவாக்கி இருக்கிறது. தமிழில் பேசுவது அவமானம் என்று நினைக்கும் ஒரு தமிழ் சமுதாயத்தை படைத்திருக்கிறது.

எழுத்துச் சீர்திருத்தம் என்ற பெயரில், கோடிக்கணக்கான தமிழ் நூல்கள் எல்லாம், புதிய தலைமுறையால் படிக்க முடியாமல் செய்து, தமிழ் மொழியை காட்டுமிராண்டி மொழி என்றும் திருக்குறளை மலம் என்றும் கம்பராமாயணத்தை ஆபாச புத்தகம் என்றெல்லாம் போற்றியவரை தங்கள் தலைவராக தாங்கிப்பிடித்து ஊரெல்லாம் அவருக்கு சிலை வைத்து கொண்டாடும் திமுகவா தமிழைக் காக்கப் போகிறது?.

மற்ற மாநிலங்களில் எல்லாம் தாய் மொழியை படிக்காமல் எவரும் பள்ளிக் கல்வியை முடிக்க முடியாது. ஆனால் திராவிட மாடலில் மட்டும்தான் இனிய தமிழ் மொழியை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு, இந்தி உட்பட மற்ற மொழிகளைப் படித்துக்கொண்டு கல்லூரி வரைக்கும் முடிக்கும் வாய்ப்பை உருவாக்கியது திமுக.

தமிழ்நாட்டில் ஏதோ எந்த பிரச்சினையும் இல்லாதது போலவும், தமிழுக்கு மட்டும்தான் தனிப் பெரும் ஆபத்து திடீரென்று வந்து விட்டது போலவும், ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி, மக்கள் இன்னமும் அறியாமையில் தான் இருக்கிறார்கள் என்ற அசட்டு நம்பிக்கையில் இருப்பதை முதல்வர்  அறிக்கை உணர்த்துகிறது. 

தமிழக மக்களின் தலையிலே மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, விலை உயர்வு என்று பல்வேறு விதமான உயர்வுகளை எல்லாம் ஏற்றி வைத்து தற்போது தொழில் வரியையும் உயர்த்தப் போவதாக கேள்விப்பட்டோம். சொன்ன வாக்குகளைத்தான் நிறைவேற்றவில்லை. கொஞ்சம் வரிகளையாவது, மக்களின் வலிகளுக்காக குறைக்கலாமே?  தயவுசெய்து மக்களையும் கொஞ்சம் கவனியுங்கள். 

நீங்கள் முதல்வராக இருக்கும் இந்த காலத்தில் தான் மக்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பதை  மறந்துவிடாதீர்கள்.  தமிழர்களின் அடையாளமாகிய எங்கள் திருக்கோயில்களையும், எங்கள் தாய்மொழியாகிய தமிழ் மொழியையும் மக்களாகிய நாங்களே காப்பாற்றிக் கொள்கிறோம். தயவுசெய்து, கவலைக்கிடமாக இருக்கும், தங்கள் ஆட்சியையும், தமிழ் நாட்டையும்,  கொஞ்சம்  கவனியுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in