நடைபயணத்தை மீண்டும் ஒத்தி வைத்த அண்ணாமலை... காரணம் இது தான்!

அண்ணாமலை
அண்ணாமலை

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவையொட்டி தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் 'என் மண் என் மக்கள்' நடைபயணம் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பங்காரு அடிகளார்
பங்காரு அடிகளார்

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மாரடைப்பு காரணமாக நேற்று மாலை உயிரிழந்தார். இதனையடுத்து அவரது மறைவிற்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்  அவரது மறைவையொட்டி தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் 'என்மண் என் மக்கள்' நடைபயணம் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் நிறுவனர் தவத்திரு பங்காரு அடிகளார் முக்தி அடைந்தார் என்ற செய்தியை தொடர்ந்து அம்மாவின் பிரிவு துயராற்ற, அடுத்து இரண்டு நாட்களுக்கு பாஜக கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய நடைபயணத்துக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துவிட்டு, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளக் காத்திருக்கும் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள், பாஜக சகோதர, சகோதரிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும், தவிர்க்கவியலாத காரணத்தினால், நடைபயணத்தில் ஏற்பட்டுள்ள இந்த தேதி மாற்றத்தைப் பொறுத்தருள வேண்டிக் கொள்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான நடைபயண தேதி விரைவில் அறிவிக்கப்படும்" எனவும் தெரிவித்துள்ளார். 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in