
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று ஆஜரானார்.
கடந்த ஏப்ரல்14-ம் தேதி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திமுக ஃபைல்ஸ் என்ற பெயரில் திமுக மூத்த நிர்வாகிகளின் சொத்து பட்டியலை வெளியிட்டார். .இதுதொடர்பாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தார்.
அதில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டு வரும் தனக்கு எதிராக எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அண்ணாமலை அவதூறு கருத்துக்களைத் தெரிவித்துள்ளதாகவும், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ள அண்ணாமலையை அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கில் இரண்டாவது முறையாக அண்ணாமலை இன்று மாலை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், ஆஜரானார். அவரிடம் டி.ஆர்.பாலுவின் வழக்கு குறித்து நீதிபதி அனிதா ஆனந்த் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அண்ணாமலை, திமுக ஃபைல்ஸ் குறித்த தனது கருத்தில் எந்த தவறும் இல்லை என்றும், தன் மீதும் எந்த தவறும் இல்லை என்றும் கூறி, டி.ஆர்.பாலு கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
இதையடுத்து, அவதூறு வழக்கில் விசாரணையை தொடங்குவதற்காக, வழக்கை டிச.21-ம் தேதிக்கு ஓத்திவைத்த நீதிபதி, அன்றைய தினமும் அண்ணாமலை ஆஜராக வேண்டும், அல்லது வழக்கறிஞர் ஆஜராகி விளக்கம் அளிக்கலாம் என உத்தரவிட்டார்.
இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, "வழக்கின் விசாரணை தள்ளிவைக்கப்பட்டதாகவும், டி.ஆர்.பாலு தொடர்ந்த வழக்கை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், வழக்குத் தொடர்பான அனைத்து ஆதாரங்களும் உள்ளன "என்றார். டி.ஆர்.பாலு தரப்பில் வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சனும், அண்ணாமலை தரப்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர்.
இதையும் வாசிக்கலாமே...
யூடியூப் சேனலை மூடிவிட்டு, பைக்கை எரிச்சுடுங்க... டிடிஎஃப் வாசனிடம் ஆவேசமான நீதிபதி!
ஆசிய விளையாட்டுப் போட்டி; தங்கம் வென்று திருச்சி டிக்கெட் கலெக்டர் சாதனை!
அதிர்ச்சி... ரூ.2 லட்சத்துக்கு ஆசைப்பட்டு உயிரை விட்ட ஊழியர்!
ஆசிய விளையாட்டுப் போட்டி : ஸ்குவாஷில் தங்கப்பதக்கம் வென்றார் தினேஷ் கார்த்திக் மனைவி!
பிக் பாஸ் வீட்டிற்குள் நுழையும் 777 சார்லி பட நாய்; உறுதி செய்த தொகுப்பாளர்