'என் தாயும் மனைவியும், ஜெயலலிதாவை விட பலம் வாய்ந்தவர்கள்’

-அண்ணாமலை அடுத்த அதிரடி!
கோவையில் அண்ணாமலை
கோவையில் அண்ணாமலை

எனது தாய் மற்றும் மனைவி ஆகியோர் ஜெயலலிதாவை விட பலம் வாய்ந்தவர்கள் என பாஜக தலைவர் அண்ணாமலை அடுத்த அதிரடி கருத்து தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் நடைபெற்ற மகளிர் தின விழாவில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 13 பெண்மணிகளுக்கு சாதனை பட்டம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசும்போது, “பெண்கள் சிங்கங்களாக ஆண்கள் சாதனைகளை உடைத்து மேலே வருகிறார்கள். மகளிர்களுக்கு மிகப்பெரிய சாதனை என்பது தாயாக இருப்பது தான். பிரதமர் தனது தாய்க்கு எழுதிய டிவிட்டர் பதிவை அனைவரும் கட்டாயமாக பார்க்க வேண்டும். பெண்கள் ராணுவத்துக்கு வந்து விட்டார்கள். பெண்கள் நுழையாத இடமே இல்லாத அளவிற்கு அனைத்திலும் வந்து விட்டார்கள்.

எம்.பி, எம்.எல்.ஏ என பெயருக்கு பின்னால் போட்டுக் கொள்வதற்காக அண்ணாமலை அரசியலுக்கு வரவில்லை. இன்னொரு கட்சியின் பலவீனத்தை பயன்படுத்தி பாஜக வளரவில்லை. பாஜக தனக்குரிய இடத்தை கண்டுபிடித்து தனி பெரும்பான்மையாக இருந்து வருகிறது. பாஜகவின் பாதையை கூட்டணி கட்சிகளுடன் ஒப்பிட்டுப் பேச வேண்டாம். எப்போது பாஜக ஆட்சிக்கு வரும் என்று பாஜக தொண்டர்கள் ஏங்கி கொண்டிருக்கிறார்கள்.

நான் சொன்ன கருத்திலிருந்து பின்வாங்க போவதில்லை. அதே நிலைப்பாட்டில் தான் உள்ளேன். ஜெயலலிதாவை ஒப்பிட்டு நான் கூறவில்லை. அரசியல் கட்சியில் சில இடங்களில் மேனேஜரும் சில இடங்களில் தலைவரும் உள்ளனர். ஜெயலலிதா கூட டெபாசிட் போய் மீண்டும் களத்தில் நின்று வெற்றி பெற்றிருக்கிறார். நானும் ஜெயலலிதாவின் பாதையில் தான் சென்று கொண்டு வருகிறேன். கடினமான பாதையை நான் தேர்ந்தெடுத்து வருகிறேன். என் தாய் என் மனைவி ஆகியோர் ஜெயலலிதாவை விட பலம் கொண்டவர்கள்.

ஆன்லைன் ரம்மியை தடை செய்வது பாஜகவின் நிலைப்பாடு. ஆளுநரிடம் இருக்கும் ஆன்லைன் தொடர்பான விவகாரம் சரியாக இல்லாத காரணத்தினால் மீண்டும் சட்டமன்றத்தில் அதை சரி செய்து ஆளுநர்களிடம் கொடுக்க வேண்டும். மீண்டும் சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி குறித்து ஆராய்ந்து எல்லா எம்எல்ஏக்களும் ஒன்றிணைந்து மீண்டும் மசோதாவை சரி செய்ய வேண்டும். ஆன்லைன் மசோதா தொடர்பான கோப்புகளை திருப்பி அனுப்பியதை மக்கள் மத்தியில் அரசு வெளியிட வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள தவறு தெரியும்.

திமுக அமைச்சர்கள் தவறாக பேசுவது புதிதல்ல. பொன்முடி தொடர்ந்து அதை தான் பேசி வருகிறார். பாஜக - அதிமுக இடையே எந்த விதமான பிரச்சினையும் இல்லை. ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு இணைவது என்பது தொடர்ந்து நடப்பது. இன்னும் ஆறு மாதத்தில் பெரிய தலைவர்கள் பாஜகவில் இணைவதற்கான சாத்தியம் உள்ளது” என்று முடித்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in