'கல்லு மூங்கிலால் நாய் மண்டையில் ஒரே போடு': விசாரணை வளையத்தில் சிக்கிய எச்.ராஜா

'கல்லு மூங்கிலால் நாய் மண்டையில் ஒரே போடு': விசாரணை வளையத்தில் சிக்கிய எச்.ராஜா

எச். ராஜாவின் சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவைத் தொடர்ந்து, அவர் மீது இந்திய விலங்குகள் நல வாரியம் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாஜக மூத்த நிர்வாகியான எச். ராஜா சர்ச்சைப் பேச்சுகளுக்குப் பஞ்சமில்லாதவர். சமூக வலைதளங்களில் அவர் பதிவுகளும் சர்ச்சைகளை ஏற்படுத்தும். அந்த வகையில் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் , ‘எங்கள் வீட்டில்  அல்சேஷன் நாய் ஒன்றைப் பிரியமாக வளர்த்தோம். ஆனால், ஒருநாள் அதற்கு வெறி பிடித்து மாடு, கன்றுகளைக் கடிக்கத் துவங்கியது. நாய் பிடிப்பவரிடம் சொன்னோம். அவர் ஒரு கல்லு மூங்கிலால் அதன் மண்டையில் ஒரே போடு போட்டார். நாய் பரிதாபமாக இறந்தது. வருத்தமாக உள்ளது. என்ன செய்வது.’ எனப் பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவு தற்போது அவரை சிக்கலில் சிக்க வைத்துள்ளது.

எச்.ராஜாவின் இந்த பதிவை ஆதாரமாகக் கொண்டு, ஸ்வப்னா  சுந்தர் என்பவர் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விலங்குகள் நல வாரியத்தில் புகார் ஒன்றை அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க இந்திய விலங்குகள் நல வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மிருக வதை தடைச் சட்டம் 1960-ன் படி விலங்களைத் துன்புறுத்துவது குற்றமாகும். இந்திய தண்டனை சட்டம் 429-ன் படி எந்த விலங்கையும் கொலை செய்தல்,  விஷம் கொடுத்தல் ஆகிய குற்றங்களுக்கு ஐந்தாண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி 7 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய சிவகங்கை மாவட்ட நிர்வாகத்திற்கு இந்திய விலங்குகள் நல வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எச்.ராஜாவின் பதிவு அவரது ட்விட்டர் பக்கத்தில் இன்னும் அப்படியே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in