முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி, 2023 ஏப்ரல் முதல் உத்தேச நிர்வாக தலைநகரான விசாகப்பட்டினத்திலிருந்து ஆட்சியைத் தொடங்குவார் என ஆந்திர மாநில ஐடி அமைச்சர் குடிவாடா அமர்நாத் தெரிவித்துள்ளார்.
ஆட்சி நிர்வாகத்தை விசாகப்பட்டினத்துக்கு மாற்றுவது குறித்து பேசிய அமைச்சர் குடிவாடா, "முதலமைச்சர் ஜெகன் அரசின் அதிகாரப் பரவலாக்கத்திற்கான செயல்களின் காரணமாக நீதி வெல்லும். தலைநகரம் என்பது ஒரு சில சுயநலவாதிகளின் முடிவு அல்ல, அது மாநில மக்கள் அனைவரின் விருப்பம். விசாகப்பட்டினத்தில் எங்களிடம் போதுமான அரசு அலுவலகங்கள் மற்றும் விருந்தினர் மாளிகைகள் உள்ளன. தலைநகரம் என்பது முக்கியமான நகரங்களில் இருக்க வேண்டும், சுயநல நோக்கங்களுக்காக தொலைதூர பகுதிகளில் இருக்கக்கூடாது என்று நாங்கள் கூறி வருகிறோம்” என தெரிவித்தார்
மேலும், "உயர்நீதிமன்றம் அதன் வரம்புக்கு அப்பாற்பட்டு தலைநகரம் குறித்த தீர்ப்பை வழங்கியது. அது சரியானது அல்ல என்று நாங்கள் கூறியுள்ளோம். உச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. நீதிமன்றங்கள் முதலமைச்சர் மற்றும் சட்டமன்றத்தின் முடிவுகளை தடுப்பது என்பது முறையல்ல என்று நாங்கள் ஏற்கனவே கூறியுள்ளோம்" என்று கூறினார்.
6 மாதங்களுக்குள் அமராவதி தலைநகரில் உள்கட்டமைப்பு வசதிகளை செய்து முடிக்கவேண்டும் என ஆந்திர அரசு மற்றும் ஏபிசிஆர்டிஏ-வுக்கு உத்தரவிட்ட ஆந்திர உயர் நீதிமன்றத்தின் தீப்பினை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.