
காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அவசரக் கூட்டம் இன்று நடைபெறும் நிலையில் தமிழகத்திற்கு 13 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று இக்கூட்டத்தில் தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட உள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்திற்கு தரவேண்டிய உரிய அளவு தண்ணீரை காவிரியில் இருந்து கர்நாடகா அரசு தொடர்ந்து தர மறுத்து வருகிறது. தங்களது அணைகளில் போதிய அளவு நீர் இல்லை. அதனால் தங்களால் நீர் திறக்க முடியாது என தொடர்ந்து கர்நாடக அரசு மறுத்து வருகிறது. தமிழக அரசு சார்பில் கர்நாடக அரசு உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறி வருகிறது என்றும், சராசரி அளவில் அணைகளில் தண்ணீர் இருக்கிறது என்றும் தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது.
கடந்த மாதம் டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில், தமிழகத்திற்கு வினாடிக்கு 3000 கன அடி நீர் அடுத்த 10 நாட்களுக்கு திறந்து விட வேண்டும் என்று கர்நாடகா அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த உத்தரவை அடுத்து கர்நாடக அணைகளில் இருந்து 3000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
தற்போது காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் கர்நாடக அணையில் தண்ணீர் நிரம்பி வருகிறது. அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அதன் காரணமாக தமிழகத்திற்கு கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவானது வினாடிக்கு 3000 கன அடியில் இருந்து 8000 கன அடியாக தற்போது உயர்ந்துள்ளது.
இந்நிலையில் அக்டோபர் 12ல் 88வது காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் கூடும் என காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் வினித் குப்தா அறிவித்திருந்தார். ஆனால், அவசர நிலை காரணமாக ஒரு நாள் முன்னதாகவே இன்று டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் கூடுகிறது.
இந்தக் கூட்டத்தின் தமிழக அரசு சார்பில் கலந்து கொள்ளும் நீர்வளத்துறை அதிகாரிகள் தமிழகத்திற்கு 13,000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்த உள்ளனர். ஏனென்றால் மேட்டூர் அணையில் நீர்மட்டம் சுத்தமாக குறைந்து தற்போது வினாடிக்கு 500 கன அடி நீர் குடிநீர் தேவைக்காக மட்டுமே திறந்து விடப்படும் நிலை உள்ளது.
இதன் காரணமாக விவசாயத்திற்கு சுத்தமாக தண்ணீர் இல்லாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனை ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கும் தமிழக அதிகாரிகள் தமிழகத்திற்கு காவிரியில் 13000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று வலியுறுத்த உள்ளனர்.