அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு சென்னையில் வரும் 15-ம் தேதி நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெறுவது வழக்கம். கடந்த இரண்டு முறையாக அதிமுக சார்பாக நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டங்கள் பெரும் பரபரப்பை கிளப்பின. இந்நிலையில் அமமுக சார்பில் அதே மண்டபத்தில் பொதுக்குழுவை நடத்தத் தினகரன் அக்கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அமமுக கட்சியின் துணைத்தலைவருமான அன்பழகன் தலைமையில், வருகிற 15-ம் தேதி காலை 9 மணிக்குச் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளது. அனைத்து செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்களுக்கான அழைப்பிதழோடு தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.